ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் இபிஎஸ்: அமைச்சர் சிவசங்கர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

News image

தேசிய ஜனநாயக கூட்டணி மீது அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

சித்திரிப்பு

Updated On :26 மார்ச் 2026, 7:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் சா.சி. சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதிமுக கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "ஒரு காலத்தில் அதிமுக தலைவர்களைச் சந்திப்பதற்காக, வட இந்தியாவிலிருந்து தலைவர்கள் வந்தனர். ஆனால், இன்று ஒவ்வொரு முடிவெடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று வருகிறார்.

அப்படியிருக்கையில், அவர் திமுக தலைவரையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் தேவையின்றி விமர்சிக்கிறார். தங்கள் பிரச்னையை தில்லிதான் சரிசெய்யும் என்று அவர்களின் கூட்டணிக் கட்சியினரே சொல்கின்றனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருப்பவர்களை அடிமைகள் என்று இபிஎஸ் சொல்வது தேவையற்ற செயல். குறிப்பாக, விசிகவை அவர் குறை சொல்கிறார்.

அந்தக் கட்சி (விசிக) தேர்தல் களத்தில் சவால்களைச் சந்தித்து, எப்படி படிப்படியாக முன்னேறியது என்பது அனைவருக்கும் தெரியும். விசிக தலைவர் திருமாவளவன், ஒவ்வொரு முறையும் தேர்தலில் தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். எங்கள் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு, இவ்வளவு நல்ல உறவைக் கொண்ட எங்கள் கூட்டணியை இபிஎஸ் விமர்சிக்கிறார்.

அதே வேளையில், அவருடைய (இபிஎஸ்) கூட்டணியில் பாஜகவுக்கு கடந்த முறையைவிட, இந்த முறை அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய ஜனநாயக கட்சி ஆகியோரும் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் நோட்டாவுக்குக் கீழே சென்ற தாமரைக்கு பெரும் இடத்தை இபிஎஸ் வழங்கியுள்ளார்.

வருங்காலத்தில் பிகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிரத்தில் சரத் பவார் சந்தித்த நிலைமையும்தான் அதிமுகவுக்கு வரும்.

அதிமுகவின் ஒவ்வோர் அறிவிப்புக்குப் பின்னரும் அமித் ஷாதான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக என்பதையே அடிமை திமுக என்று கூறும் அளவுக்கு அதிமுகவை இபிஎஸ் கொண்டு சென்று விட்டார்.

இன்றைக்கு மோடிதான் எல்லாம் என்று சொல்லி, மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவுக்கு இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.