முதல்வர் விஜய்யின் முதுகில் குத்துவதற்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் தயக்கம் காட்ட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "தங்களின் வெற்றியில் திமுகவுக்கு பங்கில்லை என்றும், திமுக செய்த குற்றங்களில் தங்களுக்கு பங்கில்லை என்றும் காங்கிரஸார் கூறுகின்றனர்.
காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுக சொல்கிறது. காங்கிரஸுக்கு முதுகில் குத்தும் பழக்கமுண்டு. ஆகையால், முதல்வர் விஜய்யும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய்யின் முதுகிலும் குத்துவதற்கு எந்த விதத்திலும் தயக்கம் காட்ட மாட்டார்கள். ஏனெனில், காங்கிரஸின் சரித்திரம் அப்படி.
60 ஆண்டுகால வரலாற்றில் அமைச்சரவையில், ஏதோ தன்னுடைய சுய முயற்சியில் சேர்ந்ததாக காங்கிரஸார் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அமைப்பும் இல்லை என்றும், தங்களால்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றதாக திமுகவினர் ஏற்கெனவே கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்காகவே பாஜகவை கண்மூடித்தனமாக திமுகவினர் எதிர்த்தனர். அது தவறு என்று அவர்கள் இப்போது உணர்ந்திருப்பர். திமுகதான் தனது தவறை உணர வேண்டும்; காங்கிரஸ் தனது தவறைத் திருத்திக் கொள்ளாது.
அதேபோல், தாங்கள் இன்னும் திமுக கூட்டணியில்தான் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். ஆனால், தவெக அமைச்சரவையில் இருப்பதாகக் கூறுகிறார். எதைத்தான் மக்களுக்கு சொல்ல வருகிறார் திருமாவளவன்? இது ஒரு நிச்சயமற்ற தன்மை.
ஆட்சி இப்போதுதான் வந்திருக்கிறது. முதலில் ஆட்சியைச் செயலாற்ற விடவேண்டும். இந்த ஆட்சி உடனே கவிழ்ந்து விடும், ஒரு நிச்சயமற்ற தன்மை என்று சொல்வது சரியில்லை. இவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பதை சில நாள்கள் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
Congress will not hesitate to stab CM Vijay in the back, says BJP Leader Tamilisai Soundararajan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







