எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!
எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை என்று முதல்வர் விஜய் பேச்சு!

முதல்வர் விஜய் - தலைமைச் செயலகம்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை ஆற்றிய முதல்வர் ஜோசப் விஜய் கூறினார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
செப். 3-ல் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான பதிலுரையை இன்று முதல்வர் விஜய் ஆற்றினார்.
இன்றைய சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் விஜய் அறிமுகம் செய்து பேசி வருகிறார்.
முதல்வர் ஜோசப் விஜய் பேசுகையில், எதிர்க்கட்சிகள் போல எனக்கு அரசியல் செய்ய விருப்பமில்லை. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்தைக்கூட, மக்கள் மீது அவர்களுக்குள்ள கவலையை வெளிப்படுத்துவதாகவே இந்த அரசு எடுத்துக் கொள்கிறது.
உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும்கூட, அதிலும் உண்மை இருக்கிறதா என்று பரிசீலிக்கப்படுகிறது.
குற்றங்களுக்கு போதை கலாசாரம்தான் காரணம் என கண்டறியப்பட்டு போதைக் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 4 ஆயிரம் கிலோவுக்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியாக உள்ளேன். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது. அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்து பேசும் எதிர்க்கட்சியினருக்கு, கடந்த 2021 - 25-ஆம் ஆண்டு கால குற்றங்களை பட்டியலிட்டுவிட்டுச் சென்றுவிட எனக்கு விருப்பமில்லை என்றும் விஜய் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக் கூடாது. ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு எம்எல்ஏ பேசுகிறார். சட்டப்பேரவையில் எலும்பை உடைப்பேன் என்று பேச்சு எதற்கு இதுதான் அரசியலா? இப்படிப் பேசி பேசித்தானே, இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.
திமுகவினருக்கு அட்வைஸ் கூற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து திமுகவினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை என்று முதல்வர் விஜய் பதில் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
மேலும் பேசிய விஜய், இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சியினரால் பல அவமானங்களை சந்தித்தார். அந்தக் காலத்தின் துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு? நமது நண்பர்கள் எது பேசினாலும் நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். மிசாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் விஜய் குறிப்பிட்டுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




