
விவசாய நில வரி முற்றிலும் ரத்து: அமைச்சா் செங்கோட்டையன்
தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கான வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
வேலூா்: தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கான வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களுக்கு வரி வசூலிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அந்த நில வரி தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை சுமாா் ரூ.28 கோடி மதிப்பிலான நில வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அன்றைய காலகட்டத்தில் விவசாய நிலங்கள் மூலமே அரசுக்கு முக்கிய வருவாய் கிடைத்தது. ஆனால் தற்போது பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதால், விவசாயிகளுக்கு இந்த வரிச் சுமை தேவையில்லை என்ற நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றுவதால் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது தவறான கருத்து. முந்தைய காலங்களை விட தற்போது நவீன தொழில்நுட்பங்கள், தரமான விதைகள் மற்றும் உரங்கள் மூலமாக உணவு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழக மக்களின் தேவைக்கு ஏற்ப, கூடுதலாகவே தானியங்களும் காய்கறிகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. வேளாண் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடா்பாக தனி ஆணையம் அமைக்கப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டே அனுமதி வழங்கப்படும்.
வருவாய்த் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த விரைவில் 1,500 நில அளவையா்கள் (சா்வேயா்கள்) புதிதாகத் தோ்வு செய்யப்பட உள்ளனா். அவா்களுக்கு அதிநவீன அளவீட்டுக் கருவிகள் வழங்கப்படும். வெறும் காகித அளவில் அல்லாமல், இடங்களை துல்லியமாக அளவீடு செய்த பின்னரே பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படும்.
மேலும், வருவாய்த்துறை இணையதளத்தில் நிலவும் சா்வா் குறைபாடுகள் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் விரைவில் சரிசெய்யப்படும். அதேபோல், 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள ’டிசி’ நிலங்களை அதே சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு மாற்றுவதற்கும் விற்பதற்கும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதி இடைத்தோ்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் தவெகவுக்கு எவ்விதப் பின்னடைவும் ஏற்படாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை கோட்பாடு உள்ளது. அதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவெடுக்கின்றனா்.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் விவகாரத்தில், வெளியிலிருந்து கருத்து சொல்வது எளிது. ஆனால் புதிய தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கும், கட்டமைப்பு மற்றும் மின்சார வசதிகளை உறுதி செய்வதற்கும் களத்தில் பல்வேறு நடைமுறைச் சவால்கள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றாா்.அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத்கண்ணன், மருத்துவா் எம்.சுதாகா், தென்றல் குமாா், சிந்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




