ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: பயிற்சிப் படி, மதிப்பூதியம் கிடைக்காததால் கணக்கெடுப்பாளர்கள் ஏமாற்றம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கான பயிற்சிப் படி, மதிப்பூதியம் கிடைக்காததால் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Published On :

மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கான பயிற்சிப் படி, மதிப்பூதியம் கிடைக்காததால் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு என இரு பிரதான கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிப் படி, மதிப்பூதியம் வழங்குவது குறித்து 2025 டிச. 29- ஆம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வீட்டுப் பட்டியல் சேகரிக்கும் பணி கடந்த ஆக. 1-ஆம் தேதிமுதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 90 சதவீதத்துக்கும் மேல் அரசுப் பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர் என இரு நிலைகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சியும் வட்டார அளவில் நடத்தப்பட்டது. கடந்த ஜூலை 2-ஆவது வாரம் இந்தப் பயிற்சி 3 நாள்கள் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சிக்கான படியாக நபருக்கு நாளொன்றுக்கு ரூ.600 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பயிற்சி செலவினமாக நபருக்கு தலா ரூ.200 வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல, வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.9,000 வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கான பணி நிறைவடைந்து இரு வாரங்களாகியும், பயிற்சிப் படி, கணக்கெடுப்பாளர்களுக்கான மதிப்பூதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. சில வட்டாரங்களில் பயிற்சிப் படியாக ரூ.1,200 வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கான பயிற்சிப் படியை வழங்க வேண்டும் என அனைத்து வட்டாரங்களிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பயிற்சிப் படி வழங்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. பயிற்சிப் படி, மதிப்பூதியம் என மொத்தம் ரூ.10,200 கணக்கெடுப்பாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாலும் உரிய பதில் கிடைக்காததால், கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயிற்சிப் படி, மதிப்பூதியம் சுமார் ரூ.102 கோடி: இதுதொடர்பாக கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசியர்கள் கூறியதாவது: வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்காமல், வெவ்வேறு ஊர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால், அனைத்து ஆசிரியர்களும் அலைக்கழிக்கப்பட்டதுடன், ஆசிரியைகள் மனரீதியான துன்புறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியைப் போன்றே, தேர்தல் பணிகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குப் பதிவு நாளில் மின்னணு இயந்திரங்களை வாக்குச் சாவடியிலிருந்து எடுத்துச் செல்லும்போதே மதிப்பூதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நிறைவடைந்து 2 வாரங்களாகியும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.

ஒருவருக்கு ரூ.10,200 வீதம் கணக்கீடு செய்தால், சுமார் ஒரு லட்சம் பேருக்கு ரூ.102 கோடி வரை பயிற்சிப் படியும், மதிப்பூதியமும் வழங்கப்படாமல் உள்ளது. பயிற்சிப் படி, மதிப்பூதியத்தை உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான ஊதியம் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நிதியை தவணை முறையில் அந்தந்த மாநில வருவாய் நிர்வாகப் பிரிவு ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு நிதி அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு மாவட்ட வருவாய் பிரிவினர் அளிக்கும் தகவல் அடிப்படையில் பணியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குக்கே ஊதியமாக வழங்கப்படும் தொகை செலுத்தப்படும். ஆகவே, இடையில் யாரும் ஊதிய நிதியை நிறுத்த முடியாது.

பணியில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா எனப் பலமுறை சோதித்த பிறகே அவர்களுக்கான ஊதிய நிதி வழங்கப்படவுள்ளது. பணியாளர் விவர சேகரிப்புக்கு தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஊதியம் சரியாகவே வழங்கப்படுகிறது என்றனர்.

"மாவட்ட மக்கள்தொகை கையேடு தயாரிப்புப் பணி நவம்பரில் தொடங்கும்'

தமிழகத்தில் மாவட்ட மக்கள்தொகை கையேடுக்கான தகவல் சேகரிப்புப் பணி வரும் நவம்பரில் தொடங்கப்படும் என மாநில மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குநர் எம். சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை சென்னையில் கூறியதாவது: 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியானது கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.

மக்கள் தங்களது குடும்ப விவரங்களை அவர்களே மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயமாகப் பதிவிடும் பணியைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 1.50 லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனடிப்படையில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. ஆனாலும், ராணுவத்தினர் குடியிருப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட வகை குடியிருப்புகளில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் அத்துறைகளின் அதிகாரிகள் அனுமதி பெற்றே நடைபெறவுள்ளது. அதேபோல வீடுகள் கட்டி குடியிராமல் சாலையோரம் குடியிருப்போர் குடும்ப விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளன.

வீடுகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நிறைவுறும் நிலையில், வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக கிராமங்கள் வாரியாக, நகராட்சி, மாநகராட்சி வாரியாக மக்கள்தொகை, அவற்றின் அமைவிட வரைபடம், வீடுகள் விவரம், தெருக்கள் விவரம், அங்குள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், தெருக்கள், போக்குவரத்து சாலைகள், கடைகள், நிலங்கள் விவரம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படவுள்ளன. அதற்கான அலுவலர்கள், களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி வரும் அக்டோபரில் தொடங்கப்படும். அதையடுத்து நவம்பரில் மாவட்ட மக்கள்தொகை கையேடு தயாரிப்புப் பணி தொடங்கும்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு கையேடுக்கான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது கூடுதல் விவரங்களுடன் கையேடு தயாரிக்கும் வகையிலான தகவல்கள் கோரப்படவுள்ளன. ஏற்கெனவே உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்துள்ள தகவல்களுடன் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்படவுள்ளன. அப்பணியில் வருவாய் கிராமத்துக்கு ஒருவர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு நியமிக்கப்படுவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.