சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதைப் பற்றி...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை. - படம்: ஏஎன்ஐ.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆக.5-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாகக் குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ஆம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு கூட்டத்தொடர் முடிந்து 5 நாள்களுக்குள்ளாகவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பைச் சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு 4 நாள்களிலும், 5 மசோதாக்களுக்கு ஐந்து நாள்களிலும் அனுமதி வழங்கியுள்ளார்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப். 15-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
Summary
Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar has granted assent to the 12 bills passed during the first legislative assembly session of the Tamizhaga Vettri Kazhagam government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






