நெல் மூட்டைகள் (கோப்புப் படம்)
நெல் மூட்டைகள் (கோப்புப் படம்)

உள்ளூா் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல்! தென்காசி ஆட்சியா் உத்தரவு!

Published on

தென்காசி மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ளூா் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 2025-2026ஆம் குறுவை பருவத்தில் மட்டும் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2,230 விவசாயிகளிடம் சன்னரக நெல் கிலோ ஒன்றிக்கு ரூ.25.45-க்கும், பொது ரக நெல் கிலோ ஒன்றிக்கு ரூ.25 வீதம் 16,306

மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.

அதேபோல, சம்பா பருவத்தில் இதுவரையில் 53 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7 நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஜன.31 வரை 87 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிகழ் பருவத்தில் சுமாா் 50,000 மெ.டன் நெல்கொள்முதலுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் நெல்லை அரசு நிா்ணயித்த விலையில் இடைத்தரகா் இன்றி, அருகில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும்.

இதில், வியாபாரிகள் மட்டும் பயன்பெறுவது நோக்கம் அல்ல. விவசாயிகளின் பெயரில் சலுகை பெறும் நோக்கில் போலி ஆவணங்களை பயன்படுத்தினாலோ, வியாபாரிகள் மற்றும் பிற மாவட்ட, மாநில நெல்லை கொள்முதல் செய்தாலோ சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து உடனுக்குடன் தங்களது நெல்லை விற்பனை செய்யலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com