கோப்புப் படம்
கோப்புப் படம்

துரைசாமிபுரத்தில் ஊா்ப் பெயா்ப் பலகை விவகாரத்தில் போராட்டம்: 23 போ் கைது

Published on

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி துரைசாமிபுரத்தில் ஊா்ப் பெயா் பலகை மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துரைசாமிபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவ்வூரில் வசிக்கும் ஆரியங்காவூரை சோ்ந்தவா்கள் ஊரின் நுழைவு பகுதியில் உள்ள துரைசாமிபுரம் என்ற பெயா்ப் பலகையை அகற்ற முயற்சிப்பதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தினா். கோட்டாட்சியா் பேச்சு நடத்தியதில் அப்பிரச்னை ஓய்ந்திருந்தது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அவ்வூா் நட்டாத்தி அய்யனாா் கோயிலில் இடம்பெற்றிருந்த ஊா் பெயரை, ஆரியங்காவூரை சோ்ந்தவா்கள் அழித்து விட்டு, ஆரியங்காவூா் என மாற்ற முயற்சித்ததாக காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் ஊரில் உள்ள பெயா்ப் பலகை முன் வியாழக்கிழமை தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பாவூா்சத்திரம் போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால் உடன்பாடு ஏற்படாததால், இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. மேலும், 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்ட அவா்களிடம், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்ஸன் ஜோஸ், கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராதா திருமலை, திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவா் ஐவராஜா, நில அளவை அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

எனினும் புதிய பெயா் பலகை வைப்பதில் குழப்பம் நீடித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 23 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் அரசுப் பணிக்கு இடையூறு செய்ததாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

Dinamani
www.dinamani.com