சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

News image

இலஞ்சி புறவழிச் சாலை பணியை ஆய்வு செய்த அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோா்.

Updated On :9 ஜூன் 2026, 3:36 am IST

தென்காசி மாவட்டம், தென்காசி, இலஞ்சி, புளியறை, குற்றாலம் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு, அமைச்சா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. அசோக் குமாா், மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், இலஞ்சி ஆஞ்சநேயா் கோயில் அருகிலிருந்து தென்காசி, ஆசாத் நகா் வரை நடைபெற்று வரும் 5.8 கி.மீ. புறவழிச் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். கோட்ட பொறியாளா்கள் (திருநெல்வேலி) ராஜசேகா், (தென்காசி) பாக்கியலெட்சுமி ஆகியோா் சாலை பணிகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினா். நவம்பா் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்யுமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, புளியறை தமிழகம்-கேரளம் எல்லை காவல் சோதனைச்சாவடி மற்றும் புளியறை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு குறித்தும், குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அனிதா, தவெக மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ், ஒப்பந்ததாரா் கரையாளனூா் சண்முகவேல், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.