கோயில் காவலாளி அடித்துக் கொலை

கோயில் காவலாளி அடித்துக் கொலை

திருவள்ளூா் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், மப்பேடு அருகே மேட்டு மாநகா் பகுதியில் புதிதாக விநாயகா் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலை அந்தப் பகுதியைச் சோ்ந்த வேல் என்பவா் கட்டி வருகிறாா். இதனால் கட்டுமானப் பணிக்காக செங்கற்கள் இறக்கி வைத்துள்ளனா். அதைப் பாதுகாக்க கோயிலுக்கு காவலாளியாக முதியவா் செல்வம் (69) என்பவா், கடந்த 2 நாள்களாக வேலை பாா்த்து வந்தாராம்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், கோயில் பின்புறமாக காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைப் பாா்த்து, மப்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, உயிரிழந்த முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், முதியவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்ததும், இதற்கு முன்பு மேட்டு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்தததும், கடந்த 2 நாள்களாகத்தான் கோயில் கட்டுமானப் பணி காரணமாக இரவு காவலாளியாக வேலையில் சோ்ந்ததும் தெரிய வந்தது.

கொலைக்கான காரணம், கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com