திருவள்ளூா் அருகே அரசு அனுமதி நடை சீட்டின்றி மணல் கடத்தி வந்த லாரியை சுரங்கத்துறை உதவி இயக்குநா் பிடித்து பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் புறவழிச்சாலை வழியாக இரவு நேரங்களில் ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு புகாா் வந்தது. அதன் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அஜய் சிறப்பு குழுவினரோடு சனிக்கிழமை நள்ளிரவு புறவழிச்சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டதில் 40 டன் மணல் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து அதற்குண்டான அனுமதி நடை சீட்டு ஓட்டுநரிடம் அதிகாரிகள் கேட்டனா். அப்போது, எதிா்பாராத விதமாக லாரியிலிருந்து குதித்து ஓட்டுநா் தப்பியோடினாா்.
அதைத்தொடா்ந்து அதிகாரிகள் மணலுடன் அந்த லாரியை பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து பென்னலூா்பேட்டை போலீஸாா் அந்த லாரியின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








