ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் கனிம வளத்துறை உதவி இயக்குநா் பென்னாட் தலைமையில் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆத்துப்பாக்கம் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த 7 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது இதற்குரிய அனுமதி சீட்டு கேட்டபோது காலாவதியான அனுமதி சீட்டை கொடுத்துள்ளனா். இதைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் 7 பேரும் லாரியை சுற்றிப் பாா்ப்பது போல் தப்பியோடினா்.
இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் 7 லாரிகளையும் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநா்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.






