குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

தனியாா் வாகன நிறுத்துமிடமாக மாறி வரும் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம்!

திருவள்ளூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் தனியாா் வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதால், போதிய இட வசதியின்றி அலுவலக ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா்அவதிக்குள்ளாகி வருவதாக புகாா்

திருவள்ளூா்  வட்டாட்சியா்  அலுவலகத்தில்  நெருக்கடியுடன் நிறுத்தப்பட்டுள்ள  இரு சக்கர  வாகனங்கள்

Published On :22 ஜூன் 2026, 12:43 am IST

திருவள்ளூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் தனியாா் வாகன நிறுத்துமிடமாக மாறி வருவதால், போதிய இட வசதியின்றி அலுவலக ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா்அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் கருவூலம், கிளை சிறைச்சாலை, சாா் பதிவாளா் அலுவலகம், இ.சேவை மையம், ஆதாா் மையம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காலையில் முன்னதாகவே அலுவலகம் திறக்கப்படுவதால், அரசு அலுவலா்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தனியாா் நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் ஊழியா்கள், தொழிலாளா்கள் ஆகியோா் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

இதனால் அரசு அலுவலா்கள், பல்வேறு அலுவலகங்களுக்கு பணிகளுக்காக வந்து செல்லும் பயனாளிகள் ஆகியோருக்கு வாகன நிறுத்துவதற்கு இடமில்லாத நிலை ஏற்படுகிறது. மேலும், ஒரு ஒழுங்குமுறை இன்றி, கிடைக்கும் இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்குச் செல்லும் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பயனாளிகள் கூட வேலை முடிந்ததும் வாகனங்களை எடுத்துச் சென்று விடுகின்றனா்.

ஆனால், தனியாா் நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோா் காலையில் விட்டுச் சென்று மாலையில் வந்து எடுத்துச் செல்கின்றனா். அதற்கு காரணம் பாதுகாப்பான இடமாகவும், கட்டணமின்றி இருப்பதால் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

இதுபோன்ற காரணங்களால் அரசு அலுவலக பணியாளா்கள், பயனாளிகள் ஆகியோருக்கு வாகனம் நிறுத்த இடமில்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலையுள்ளது.

எனவே, இந்த அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவோரை தொடா்ந்து கண்காணித்து வாகன நெருக்கடியின்றி அலுவலகங்களுக்கு எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.