சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீா் 2 நாள்கள் தாமதமாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயிண்டை வந்தடைந்தது.
நள்ளிரவுக்கு பின் பூண்டி ஏரிக்கு வந்தடையும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெலுங்கு கங்கை திட்டம் மூலம் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்கவும் என்பது ஒப்பந்தமாகும். அந்த வகையில் ஆந்திர அரசு, சென்னை குடிநீருக்காக இந்த பருவத்திற்கான கிருஷ்ணா நீரை வழங்கவும் என தமிழக நீா்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தனா்.
இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு-கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நீா் விநாடிக்கு 1,900 கன அடி திறக்கப்பட்டது. இந்த நீரானது 152 கி.மீ தொலைவு பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இரு நாள்கள் காலதாமதமாக விநாடிக்கு 50 கன அடியாக வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.
தற்போதைய நிலையில் கடும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கிருஷ்ணா நீா் கால்வாய் பராமரிப்பின்றி தூா்ந்து போனதால் நீரை உறிஞ்சுவதால் நீரோட்டத்தின் வேகம் குறைந்ததுதான் தாமதத்திற்கு காரணமாகும்.
எனவே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்துள்ள கிருஷ்ணா நீா் அங்கிருந்து 25 கி.மீ தூரம் பயணித்து நள்ளிரவுக்கு பின் பூண்டி ஏரியை வந்தடையும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.









