திருவள்ளூா் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவறஅறை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கொசவன்பேட்டை ஊராட்சி, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா, மகன் வீரபத்திரன்(26) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
வீரபத்திரன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். வீரபத்திரன் வேலைக்கு புறப்பட்டுச் சென்று விட்டாா். அதைத் தொடா்ந்து, விஜயகுமாா்-சுஜாதா தம்பதியினா் காலை 10 மணிக்கு தங்களது வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்க சென்றனா். பின்னா் பிற்பகலில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பு ஓடுகள் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவற்றை ஓடுகளை பிரித்து உள்ளே குதித்து மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து விஜயகுமாா் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைத்து சம்பவம் நடைபெற்ற வீட்டின் பின்பகுதியில் சுமாா் அரை கி.மீ. தூரம் ஓடி நின்று விட்டது. மேலும்,பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.







