குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீத உற்பத்தி இத்தொழில் நிறுவனங்கள் மூலம் நடக்கிறது. இந்திய ஏற்றுமதி தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 40 சதவீத ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது. சுமார் 6 ஆயிரம் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய அளவில் சுமார் 633.92 லட்சம் தொழில் நிறுவனங்கள் தொழில் துறையின் வளர்ச்சிக்கு பாங்காற்றி வருகின்றன.
தமிழகத்தில் சுமார் ரூ. 2, 23, 783.75 கோடி முதலீட்டில் சுமார் 20.13 லட்சம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் செய்து வருகின்றன. இதன்மூலம் 128.91 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் 2,023 தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டன.
இத்தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்குவதற்கு பல துறைகளின் அனுமதியைப் பெறுவதற்காக ஒற்றை சாளர திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல துறைகளின் அனுமதியைப் பெறுவதற்கு www.easybusiness.tn.gov.in/msme என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களுடன் பதிவு செய்தால் ஏளிதாக அனுமதி பெறலாம்.
இத்தொழில்களின் மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு வணிக நடைமுறகள் எளிதாக்கும் சட்டம் விதிகள்-2018 என்ற சட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் தொழில் தொடங்குவதற்கு நடைமுறைகள், உரிமங்கள், அனுமதிகள் வழங்குவது எளிதாக்கப்பட்டுள்ளன.
இத்துறையில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம் (www.msmeonline.tn.gov.in/uyegp), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகிய தமிழக அரசின் திட்டங்கள் மூலம் வங்கிகளில் கடனுதவி வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களுக்கு அரசின் மானிய உதவிகளை பெறுவதற்காகவும் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டு மானியம், குறைந்தழுத்த மின் மானியம், மின்னாக்கி மானியம், பின் முனை வட்டி மானியம், ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்ட மானியங்கள் பெறுவதற்கு https:// msmeonline.tn.gov.in/incenti ves/index.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடனுதவி, அரசின் மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய www.kviconline.gov.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு சந்தை வாய்ப்பு உதவி, நலிவுற்ற நிறுவனங்களைப் புனரமைக்கவும் உதவி, விநியோகம் செய்யப்பட்ட பொருள்களுக்கான தொகையை வழங்காத நிறுவனங்களிடம் இருந்து தொகையைப் பெற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக தொழில் நிறுவன வளர்ச்சி ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.
திறன் மிகுந்த தொழிலாளர்களை உருவாக்குவதற்காக அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழுமத் தொழில் திட்டங்கள் மூலம் கூட்டாக தொழில் தொடங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எம்.வி.சுவாமிநாதன் கூறியது:
முந்தைய காலங்களில் வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக மாவட்டத் தொழில் மையத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் காலதாமதமும் ஏற்பட்டது. ஆனால் தற்போது அனைத்து நடைமுறைகளும் இணையவழியாக மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து சேவைகளும் நம்முடைய கை அருகே வந்துள்ளது. இதனால் தொழில்முனைவோருக்கு காலதாமதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அவர்கள் எளிதாக தொழில் தொடங்கி அமைதியான முறையில் தொழில் நடத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது என்றார்.