

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.500 கோடிக்கும் மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் யு.யு.லலித், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ. 40 ஆயிரம் கோடி கடன், வராக்கடன்களாக மாற்றப்பட்டது. விசாரணையின் போது இதற்கான ஆவணங்களை மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் சமர்ப்பித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வாராக்கடன்களால் நாட்டில் பெரும்பாலான வங்கிகள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. இத்தனைப் பெரிய தொகைகளை எந்த விதிமுறைகளின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்குகின்றன எனத் தெரியவில்லை. இதுபோன்ற பெரிய கடன்தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கு போதுமான வழிமுறைகள் இருக்கிறதா?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து ரூ.500 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதனைத் திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை ஆறு வாரங்களுக்குள் ரிசர்வ் வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.