இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும்!

இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும் என்று அந்நாட்டின் TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங் தெரிவித்துள்ளார். 
இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும்!
Updated on
2 min read

இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும் என்று அந்நாட்டின் TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங் தெரிவித்துள்ளார். 

சீனாவின் ட்சே சியாங்மாநலத்தின் வூஜென் நகரில் நடைபெற்றுவரும் 5-வது உலக இணைய மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று (வியாழக்கிழமை) TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங், மொபைல் இணையத்தில் கவனம் செலுத்தி வரும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமான APUS-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாவோ மிங், மற்றும் ஸ்மார்ட் போன் உலகில் புகழ்பெற்ற ஹானர் நிறுவனத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்ப அறிவு மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

அப்போது அவர்களிடம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தொழில்நுட்பங்கள் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் என்னென்ன துறைகளில் சீனா முன்னேற்றம் அடைய உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங்,  இணைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் இணைய தயாரிப்புகளின் பயன்பாட்டு ஆகிய இரண்டினாலும் சீனா ஒரு உலகமயமாக மாறும். மேலும், தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு திருப்புமுனைகள் ஏற்படும். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சார்ந்து இணைய அடிப்படையிலான புதிய வர்த்தகம் உருவாகும் என்று கூறினார். 

மேலும் இணைய அடிப்படையிலான தொழில்நுட்ப வளர்ச்சி  மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டுவர முடியும். எதிர்காலத்தில், இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் போல் மூளை விஞ்ஞானத்தின் அடிப்படையில் அளவீட்டு கருவிகள் பிரபலமாகவும் வசதியாகவும் இருக்கும் என்றும் கூறினார். 

இந்த இணைய மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையத்தின் ஒளிக்கண்காட்சியில் தொழில்நுட்பம் மனிதர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன சின்ன விசயத்திலும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதை உணர்த்தும் விதமாக பல்பொருள் அங்காடியில் நாம் பொருட்களை வாங்க பயன்படுத்தும் கூடைகள் இப்போது ஒரு தானியங்கி கூடையாக நம்மோடு அதுவும் நடந்து வருவதை பார்க்க முடிந்தது. 

இதுமட்டும் அல்லாமல் பேசும் ரோபோக்கள், ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து, எத்தனையோ வியப்பூட்டு விசயங்களை கண்காட்சியில் காண முடிந்தது. மேலும் கண்காட்சியை காணவந்திருக்கும் பார்வையாளர்களின் முகபாவனைகளை படம் பிடித்து சேமித்து வைக்கும் டிஜிட்டல் திரை ஒன்றும் வியப்பூட்டுவதாக இருந்தது. 

அதைவிட ஒரு ஆச்சரியமன அதிசியமான ஆனால் உணமையான ஒரு விசயம். உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி அறிவிப்பாளர் இந்த இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுதான். சமீபத்திய AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இயங்கும் இந்த இயந்திர செய்தி அறிவிப்பாளரின் குரல் மற்றும் முகபாவனைகளை பார்க்கும் போது  உண்மையான செய்தி வாசிப்பாளர் போலவே இருக்கிறது.  

AI தொழில்நுட்பத்தினால் இயங்கும் இந்த செய்தி வாசிப்பாளர் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா மற்றும் சீன தேடுபொறி நிறுவனமான Sogou.com ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி உற்பத்தி செலவுகளை குறைத்து, திறனை மேம்படுத்துவதோடு, பல சமூக ஊடக தளங்களில் 24 மணிநேரம் வேலை செய்ய முடியும் என்று சின்குவா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com