வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்வு

மத்திய பட்ஜெட்டின் தாக்கம் பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் ஏற்றம் கண்டது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2021, 9:40 pm

மத்திய பட்ஜெட்டின் தாக்கம் பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
 பங்குச் சந்தை பட்ஜெட்டுக்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிக மூலதன செலவினத் திட்டங்கள், நேரடி வரிகள் உயர்த்தப்படாதது, புதிய வரிகள் விதிக்கப்படாதது உள்ளிட்டவை சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன.
 மேலும், பொருளாதார வல்லுநர்களும் சந்தை ஆய்வாளர்களும் இது ஒரு தைரியமான வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் என்றும், மிகவும் அஞ்சப்படும் கோவிட் வரி மற்றும் வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் ஆகியவை இல்லாதது பெரும் நிவாரணமாக அமைந்தது என்றும் கருதுகின்றர்.
 இதனால், பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்துள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, திங்கள்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,49,423 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
 சந்தை மதிப்பு ரூ.196.61 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 3,114 பங்குகளில் 1,755 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,184 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 175 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 249 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 334 பங்குகள் வெகுவாக உயர்ந்து உறை நிலையை அடைந்தன.
 2-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 592.65 புள்ளிகள் கூடுதலுடன் 49,193.26-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,154 வரை உயர்ந்தது. இறுதியில் 1,197.11 புள்ளிகள் கூடுதலுடன் 49,797.72-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் பஜாஜ் ஃபின் சர்வ், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை மட்டுமே சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன. மற்ற அனைத்துப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 எஸ்பிஐ முன்னேற்றம்: இதில் எஸ்பிஐ 7.10 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், மாருதி சுஸுகி, கோட்டக் பேங்க், சன் பார்மா, பவர் கிரிட் ஆகியவை 3 முதல் 6.70 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
 தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 366.65 புள்ளிகள் உயர்ந்து 14,647.85-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 14,731.70 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீசஸ், ஆட்டோ, மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன.
 ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்வு
 வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 72.96-ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 72.92 வரையிலும், குறைந்தபட்சமாக 73.05 வரையிலும் சென்றது.
 கச்சா எண்ணெய் பேரல் 57.17 டாலர்
 சர்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.46 சதவீதம் அதிகரித்து 57.17 டாலராக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.