'கிளப்ஹவுஸ்' செயலி, பயனரின் தரவுகளை சீன அரசுடன் பகிர்ந்துகொள்ளலாம் என ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கிளப்ஹவுஸ்’ என்ற மொபைல் செயலி, பயனர்கள் ஒன்று கூடி விவாதிக்கும் சமூக வலைதள செயலியாக பிரபலமாகியுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி பலர் ஆடியோ மூலமாக விவாதிக்க முடியும். ஆனால், பேசி முடித்தவுடன் இந்த தரவுகள் எதுவும் அதில் சேமிக்கப்படாது, மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிளப்ஹவுஸ் செயலி, சீன அரசாங்கத்துடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்துகொள்ளலாம் என்பதால் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
சீனாவின் ஷாங்காயை தளமாகக் கொண்ட அகோரா என்ற மென்பொருள் நிறுவனம், கிளப்ஹவுஸ் பயன்பாட்டிற்கு மென்பொருள் தளத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளதாகவும் எனவே செயலில் உள்ள பயனர்களின் தரவுகளும் அவர்கள் பேசும் ஆடியோக்களும்கூட சேமிக்கப்பட்டு சீன அரசுடன் பகிரப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள கிளப்ஹவுஸ் நிறுவனம், தரவுகள் மற்றும் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளது.
சீனாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.