இந்தியாவில் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளின் படி, வாட்ஸ் அப் கணக்குகளை மூன்று கட்டங்களாக ஆராய்ந்து இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
நீக்கப்பட்ட கணக்குகளில் சுமார் 95 சதவிகித கணக்குகள், அங்கீகாரம் பெறாத, ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை அனுப்பக்கூடிய கணக்குகள் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம், தேவையில்லாத, பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மெசேஜ்களில் இருந்து வாட்ஸ் அப் கணக்குகளை பாதுகாப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
நாங்கள் அதிக மற்றும் அசாதாரணமான மெசேஜ்களை அனுப்புவதைக் கண்டறிய திறன்மிக்க முறைகளைப் பயன்படுத்தி வருகிறோம். எங்களது பெரும்பான்மையான பயனர்கள் தங்களது கணக்கை புதுப்பிக்கவும், தேவையில்லாத கணக்குகளை தடைசெய்யவும் கோரிக்கைவிடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தரவு பாதுகாப்பு மசோதா நடைமுறைகக்கு வரும் வரை தனது நிறுவனம் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிரைவசி பாலிசியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தெரிவித்திருந்தது.