சாம்சங், ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய சியோமி...வாடிக்கையாளர்களின் ஆதர்சமாக மாறி அசத்தல்
சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக உலகின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி உருவெடுத்துள்ளது.
நவீன உலகத்தில் முக்கிய பங்காற்றிவரும் ஸ்மார்ட்போன், மக்களை தன்னை சுழல வைத்து வருகிறது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதகரித்துவருகிறது, உலகம் முழுவதும் மக்களை கவரும் வகையில் பல வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து நிறுவனங்கள் விற்பனை செய்துவருகிறது.
அதில், சாம்சங், ஆப்பிள், சியோமி ஆகிய நிறுவனங்கள் கொடி கட்டி பறந்துவருகிறது. இந்நிலையில், சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக உலகின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி உருவெடுத்துள்ளதாக கவுன்டர் பாயின்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூன் மாதத்தில், சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனை 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்துவரும் பிராண்டாக சியோமி உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க | இதயங்களை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி: 4-வது இடம் பிடித்தது
இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் சியோமி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2011ஆம் ஆண்டு சியோமி நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 80 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக கவுன்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் தருண் பதாக் கூறுகையில், "ஹூவாய் நிறுவனம் சரிவை சந்தித்ததிலிருந்து அதன் சந்தையை பிடிக்க சியோமி நிறுவனம் கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, ஹூவாய் நிறுவனம் ஆதிக்கம் செலுத்திய சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளில் தங்களது சந்தயை விரிவுப்படுத்திவருகிறது" என்றார்.