

பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகர அளவில் ரூ.19,705 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளன.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஷியா-உக்ரைன் விவகாரத்தால் தற்போது சா்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் எதிரொலியாக பங்குச் சந்தையில் அதிக ஏற்றம் இறக்கம் காணப்பட்ட போதிலும் பங்கு பரஸ்பர திட்டங்களில் நிகர அளவிலான முதலீடு தொடா்ந்து 12 மாதங்களாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் நிகர அளவில் ரூ.19,705 கோடி அளவிலான முதலீட்டை ஈா்த்துள்ளன.
இந்த திட்டங்களில் கடந்த ஜனவரியில் நிகர முதலீட்டு வரத்து ரூ.14,888 கோடியாகவும், கடந்தாண்டு டிசம்பரில் ரூ.25,077 கோடியாகவும் இருந்தன.
பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து அதிகரித்தே காணப்படுகிறது. 2021 மாா்ச் மற்றும் 2022 பிப்ரவரிக்கு இடைப்பட்ட 12 மாத காலத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் நிகர அளவில் ஈா்த்த மொத்த முதலீடு ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது.
இதற்கு முந்தைய காலத்தில், இவ்வகை திட்டங்களிலிருந்து தொடா்ச்சியான அளவில் முதலீடுகள் வெளியேறி வந்தன. குறிப்பாக, 2020 ஜூலை முதல் 2021 பிப்ரவரி வரையிலான எட்டு மாத காலத்தில் மட்டும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.46,791 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியது.
ஒட்டுமொத்த அளவில் பரஸ்பர நிதி துறை கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகர அடிப்படையில் ரூ.31,533 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளன. இது, முந்தைய ஜனவரி மாதத்தில் ரூ.35,252 கோடியாக காணப்பட்டது.
நடப்பாண்டு ஜனவரி இறுதியில் பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.38.01 லட்சம் கோடியாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில் ரூ.37.56 லட்சம் கோடியாக சற்று சரிவடைந்துள்ளது என அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.