இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் சுமாா் ரூ.36 லட்சம் கோடியாக (44,700 கோடி அமெரிக்க டாலா்) அதிகரித்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும். எனினும், கடந்த நிதியாண்டில் நாட்டின் இறக்குமதி 16.5 சதவீதம் அதிகரித்து 71,400 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
இது தொடா்பாக, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் இத்தாலி தலைநகா் ரோமில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் சரக்கு-சேவைகளுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 67,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 77,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். சா்வதேச அளவில் இந்தியாவின் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை இது வெளிக்காட்டுகிறது.
இந்திய சரக்குகளின் ஏற்றுமதி 44,700 கோடி டாலராகவும், சேவைகள் ஏற்றுமதி 32,300 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், ஒட்டுமொத்த இறக்குமதி 89,200 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது. சேவைகள் துறை இறக்குமதி 17,800 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது’ என்றாா்.