8 நாள்கள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்வு

தொடர்ந்து 8 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது.
8 நாள்கள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

தொடர்ந்து 8 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 146.95 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயர்ந்து 17,450.95-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்து வந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், வாகன விற்பனை அதிகரிப்பு மற்றும் பிப்ரவரியில் ரூ.1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியவை எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்த்தது. இதனால், 8 நாள்கள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 கடந்த 8 நாள்களில் சென்செக்ஸ் 2,357.39 புள்ளிகள் (3.84 சதவீதம்), நிஃப்டி 731.90 புள்ளிகள் (4.22 சதவீதம்) குறைந்தது குறிப்பிடத்தக்கது.
 சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3.21 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.260.93 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.4,559.21 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் எழுச்சி:
 சென்செக்ஸ் காலையில் 174.36 புள்ளிகள் கூடுதலுடன் 59,136.48-இல் தொடங்கி 59,109.54 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 59,475.45 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 448.96புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்ந்து 59,411.08-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. பவர்கிரிட் (1.53 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.22 சதவீதம்) ஆகிய இரண்டு மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 எஸ்பிஐ அபாரம்: பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 2.69 சதவீதம், தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி 2.54 சதவீதம், டெக் மஹிந்திரா 2.30 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 2.20 சதவீதம், டிசிஎஸ் 2.16 சதவீதம், இண்டஸ்இண்ட் வங்கி 2.09 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, மாருதி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், கோட்டக் வங்கி, விப்ரோ, ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், முன்னணி நிறுவனப் பங்குகளான இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, என்டிபிசி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com