இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான போர் எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 9) இந்திய பங்குச்சந்தை வணிகம் இறக்கத்துடன் தொடங்கியது. காலையில் 65,560.07 என்ற புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு மாலையில், 65,434.61 ஆக நிறைவு பெற்றது. இது 0.73 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 141.15 புள்ளிகள் சரிந்து 19,512.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது 0.72 சதவிகிதம் சரிவாகும்.
இஸ்ரேல் - ஹமாஸ் படையினரிடையேயான போரின் காரணமாக பங்குச்சந்தையில் 4 லட்சம் கோடிவரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போரால் விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாக கச்சா எண்ணெய் விலையும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. போர் பதற்றம் நீடித்தால் பங்குச்சந்தைகளின் தொடர் இறக்கம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என முதலீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.