2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 394 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 394 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 394 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. பொதுத் துறை வங்கிப் பங்குகள் தவிர்த்து ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட மற்ற துறை பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.31 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.322.02 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,005.49 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 297.06 புள்ளிகள் கூடுதலுடன் 66,376.42-இல் தொடங்கிய சென்செக்ஸ் 66,299.79 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 66,592.16 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 393.05 புள்ளிகள் (0.60 சதவீதம்) உயர்ந்து 66,473.05-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,822 பங்குகளில் 2,349 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,339 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 134 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
 24 பங்குகள் விலை உயர்வு:
 சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 24 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,409 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 691 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 42 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,
 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
 நிஃப்டி 128 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 77.15 புள்ளிகள் கூடுதலுடன் 19,767,00-இல் தொடங்கி 19,689.05 வரை கிழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,839.20 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 128.20 புள்ளிகள் (0.65சதவீதம்) உயர்ந்து 19,818.05-இல் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com