/

2 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!

கடந்த இரு நாள்களாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம், இன்று சற்று உயர்வுடன் முடிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 12:54 pm

DIN

கடந்த இரு நாள்களாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம், இன்று சற்று உயர்வுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.85 புள்ளிகள் உயர்ந்து 79,105.88 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.19 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.75 புள்ளிகள் உயர்ந்து 24,143.75 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.020 சதவிகிதம் உயர்வாகும்.

கடந்த இரு நாள்களாக பங்குச்சந்தை வணிகம் மந்தமாக இருந்த நிலையில், இன்று காலையும் 79,065.22 என்ற புள்ளிகளுடன் சென்செக்ஸ் வணிகமானது. படிப்படியாகக் குறைந்து 78,895.72 என்ற சரிவை அடைந்தது. இது இந்த நாளின் அதிகபட்ச சரிவு. இதேபோன்று 79,228.94 என்ற உச்சத்தையும் எட்டியது. வணிக நேர முடிவில் நேர்மறையாக சென்செக்ஸ் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் வணிகத்திலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 15 நிறுவனத்தின் பங்குகள் உயர்வுடனும், எஞ்சிய 15 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் இருந்தன.

அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவன பங்குகள் 2.35% உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக எச்.சி.எல். டெக் 2.11%, இன்ஃபோசிஸ் 1.44%, டெக் மஹிந்திரா 1.40%, எம்&எம் 1.01%, டாடா மோட்டார்ஸ் 0.85%, பாரதி ஏர்டெல் 0.83%, எஸ்பிஐ 0.69% உயர்ந்திருந்தன.

இதேபோன்று அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. இவை -2.39% வரை சரிந்தன. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் -1.94%, டாடா ஸ்டீல் -1.83%, அதானி போர்ட்ஸ் -1.45%, பவர் கிரிட் -1.03% சரிந்திருந்தன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் டிசிஎஸ், இபிஎல், சென்னை பெட்ரோ, பேடிஎம், பாலிஸி பஜார், ரத்தன் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. நிஃப்டி பட்டியலில் ஐடி நிறுவனப் பங்குகள் அமோக ஏற்றத்தைக் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.