

நாட்டின் பங்குச்சந்தை பலமாக முன்னேறும் போக்கு தொடருமானால் நடப்பாண்டு இறுதிக்குள் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 25,200 என்ற இலக்கை எட்டும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் நீண்ட கால இலக்கான 50,000 என்றளவை நிப்டி குறியீட்டெண் தொடும் என ஐசிஐசிஐ குழுமத்தின் பங்குச்சந்தை பிரிவு வெளியிட்ட ஜூன் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 50 மிகப்பெரிய நிறுவனங்களின் ஈடிட்ட சராசரி மதிப்பு கொண்டு கணக்கிடப்படும் நிப்டி குறியீட்டெண் 22,200 என்கிற அளவில் பலமான ஆதரவை பெறுமெனவும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறபோதும் இந்த அளவிற்கு மேலாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என ஐசிஐசிஐ குறிப்பிடுகிறது.
1999 முதல் கிடைக்கிற தகவல்களின் அடிப்படையில் நாட்டின் தேர்தலுக்கு பிறகான ஆண்டின் இறுதியில் பங்குச்சந்தை 21 சதவிகிதமளவு குறைந்தபட்ச புள்ளியிலிருந்து ஏறியுள்ளது. 4-6 சதவிகிதம் மாறுபட்டாலும் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்புகளை இந்த ஆதாயங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
மேலும், 2022 முதல் பங்குச்சந்தை இறங்குகிற ஒவ்வொரு 10 சதவிகிதத்துக்கும் பதிலீடாக 20 சதவிகிதம் அடுத்த ஆறு மாதங்களில் உயர்வை கண்டுள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால் டிசம்பரில் 25,200 என்ற உச்சத்தை நிப்டி எட்டும்.
அமெரிக்க தேர்தல் உலகளாவிய சந்தையின் மதிப்பை வழக்கமாக உயர்த்தும். அமெரிக்க சந்தை ஜூன் மாதத்தை காட்டிலும் டிசம்பரில் 9 சதவிகிதமளவு ஏற்றத்தை காணும். அதே வேளையில் நிப்டி (2008-ம் ஆண்டு தவிர) மற்றைய ஆண்டுகளில்20 சதவிகிதம் அளவுக்கு உயர்வை எட்டியுள்ளது.
இந்த அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்வாங்கினாலும் உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. நடப்பாண்டின் இரண்டாம் பகுதியில் அமெரிக்க வட்டி விகிதக் குறைவு சாதகமாக இருப்பின் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டில் அதிகரிக்கும்.
சந்தையின் வளர்ச்சியில் நேர்மறை போக்கு தென்படுவது தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஆண்டின் இறுதிக்குள் 16 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆதாயத்தை பெறும் என ஐசிஐசிஐ கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.