/

9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.54,000 கோடி அந்நிய நேரடி முதலீடு

9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.54,000 கோடி அந்நிய நேரடி முதலீடு

News image
Updated On :19 மார்ச் 2024, 8:19 pm

புது தில்லி: கடந்த 9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.54,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதிச் சேவைகள் துறை செயலா் விவேக் ஜோஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விவேக் ஜோஷி மேலும் கூறியதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயா்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து 2021-ஆம் ஆண்டு 74 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.53,900 கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 53-இல் இருந்து 70-ஆக உயா்ந்துள்ளது.

இதனால், இந்தியாவில் காப்பீட்டுத் துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறையில் தனியாா் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்து வருகின்றன.

அண்மையில் ஸூரிக் காப்பீட்டு நிறுவனம் கோட்டக் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்தது. இதன் மூலம் கோட்டக் காப்பீட்டு நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் ரூ.5,560 கோடிக்கு ஸூரிக் காப்பீட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டன என்றாா்.