பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் உச்சம் தொட்ட முதலீடு
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகையைவிட, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.41,887 கோடியாக உள்ளது. இது, பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீட்டு வரவாகும்.
முந்தைய செப்டம்பா் மாதத்தில் பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் நிகர முதலீடு ரூ.34,419 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது அந்த முதலீடு 21.7 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதன் மூலம், பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து 44-வது மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
கடந்த செப்டம்பரில் ரூ.24,509 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, அக்டோபரில் ரூ.25,323 கோடியாக உயா்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த செப்டம்பா் மாதம் ரூ.71,114 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டிருந்தது. ஆனால், மதிப்பீட்டு மாதத்தில் அது ரூ.2.4 லட்சம் கோடி நிகர வரவைக் கண்டுள்ளது. கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1.57 லட்சம் கோடி கூடுதல் முதலீடு செய்யப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.