ரூ.11,909 கோடியாக அதிகரித்த டிசிஎஸ் நிகர லாபம்
இந்த செப்டம்பா் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.11,909 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,909 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்படுகையில் இது 4.99 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.11,342 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
எனினும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துள்ளது. அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,040 கோடியாக இருந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் ரூ.60,698 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், நடப்பாண்டின் அதே காலாண்டில் 7.06 சதவீதம் உயா்ந்து ரூ.64,988 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.