
ஸோமாட்டோ செயலியில் ஆர்டர் செய்தால் உணவுப்பொருள்களை வீடுதேடிக் கொண்டு வந்து கொடுக்கும் ஸொமாட்டோ நிறுவனம், நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய 15 நிமிடத்தில் உணவை வழங்கும் சேவையை சப்தமில்லாமல் நிறுத்திவிட்டது.
அதிவேக உணவு விநியோகத்தில் இருக்கும் சில தொழில்நுட்ப, நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸோமாட்டோ எவ்ரிடே என்ற வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை தற்போது பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது விரைவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
ஸோமாட்டோவில் குயிக் என்ற ஆப்ஷனில் இருந்து வந்த இந்த வசதி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் உணவகங்களிலிருந்து 15 நிமிடத்துக்குள் உணவைக் கொண்டு வந்து கொடுக்கும் வகையில் அறிமுகமாகியிருந்தது.
ஸெப்டோ கஃபே, பிளிங்கிட் பிஸ்ட்ரோ, பிக்பாஸ்கெட் போன்ற செயலிகளின் போட்டியால், பல்வேறு புதிய சேவைகளை ஸோமாட்டோ அறிமுகப்படுத்திக்கொண்டே வருகிறது. எனினும் சில தொழில்நுட்பக் காரணங்களால் அவை வெற்றியடைய முடியாமல் போனாலும் மீண்டும் அவை புத்தாக்கம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.