

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
நடப்பு 2025}26 நிதியாண்டின் ஜனவரி மாதம் வரை, இத்துறைமுகம் மொத்தம் 3.597 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 3.394 கோடி டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது, இது 6 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக, கடந்த ஜனவரியில் மட்டும் 40 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதன்மூலம், 2024 மார்ச்சில் கையாளப்பட்ட முந்தைய அதிகபட்சமான 39.5 லட்சம் டன் சரக்குகள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை 7,16,105 டிஇயூஎஸ் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9.40 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேபோன்று, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தொழிலக நிலக்கரியில் 12.78 சதவீதம், பாஸ்பேட் கல் 12.65 சதவீதம், கட்டுமானப் பொருள்கள் 92.10 சதவீதம், உரம் 40.12 சதவீதம், உர மூலப்பொருள்கள் 11.51 சதவீதம், சமையல் எண்ணெய்யில் 17.52 சதவீதம் என வளர்ச்சி பெற்றுள்ளன.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உயர்திறன் கொண்ட நகரும் பளு தூக்கிகள், 3-ஆவது வடக்கு சரக்குத் தளத்தை முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல், தற்போது செயல்படுத்தப்பட்ட 4-ஆவது உயர்திறன் இழுவைப் படகு, சரக்கு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற திட்டமிட்ட மேம்பாடுகள் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது என வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.