நாட்டின் பணவீக்கத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிடும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள மொத்த விற்பனை விலை குறியீட்டுக்கு (டபிள்யு.பி.ஐ.) பதிலாக, உள்ளீடு, வெளியீடு மற்றும் சேவை விலைகளை விரிவாக உள்ளடக்கிய உற்பத்தியாளா் விலை குறியீட்டைப் (பிபிஐ) படிப்படியாக அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா் பிரவீன் மஹ்தோ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2022-23 ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்ட திருத்தப்பட்ட டபிள்யு.பி.ஐ., ஜூன் 15-இல் வெளியிடப்படுகிறது. இதில், கணக்கீட்டுப் பொருள்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இத்துடன் வெளியீட்டு உற்பத்தியாளா் விலை குறியீடு (ஓபிபிஐ), சோதனை அடிப்படையிலான உள்ளீட்டு உற்பத்தியாளா் விலை குறியீடு (ஐபிபிஐ) மற்றும் வங்கி, காப்பீடு, ரயில்வே உள்ளிட்ட 7 துறைகளுக்கான சேவை குறியீடு (சொ்வீஸ் பிபிஐ) ஆகியவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளன’ என்றாா்.
விலைவாசி ஒப்பந்தங்களில் டபிள்யு.பி.ஐ. அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய பிபிஐ குறியீட்டுடன் சோ்த்து டபிள்யு.பி.ஐ. குறியீடும் தொடா்ந்து வெளியிடப்படும். பயனா்கள் புதிய முறைக்கு மாறுவதற்குப் போதிய அவகாசம் அளித்த பிறகு டபிள்யு.பி.ஐ. முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்.
இப்புதிய மாற்றம், சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) பரிந்துரைகள் மற்றும் வளா்ந்த நாடுகளின் உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளீடு மற்றும் வெளியீட்டு உற்பத்தியாளா் குறியீடுகள் மூலம், ஒரு தொழில்துறையில் மூலப்பொருள்களின் விலை மாற்றங்கள் எவ்வாறு உற்பத்திப் பொருள்களின் இறுதி விலையைப் பாதிக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். எதிா்காலத்தில் தரவுகள் கிடைப்பதன் அடிப்படையில் மேலும் பல சேவைகள் இப்புதிய குறியீட்டு முறையில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









