இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள 2 முழு நேர உறுப்பினா் பதவிகளை நிரப்புவதற்காகத் தகுதியானவா்களிடமிருந்து மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
தற்போது செபி அமைப்பில் தலைவா் தவிா்த்து, 4 முழு நேர உறுப்பினா்கள் உள்ளனா். இதில் கமலேஷ் சந்திர வா்ஷினி, அமா்ஜீத் சிங் ஆகிய இருவரின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் பணிகளை மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை தொடங்கியுள்ளது.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவா்கள் பங்குச் சந்தை சாா்ந்த நடைமுறைகள், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல் அல்லது நிா்வாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்த அறிவாற்றலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் 45 முதல் 60 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். மேலும், தங்களின் பணிப் பொறுப்புகளைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு நிதி அல்லது இதர தனிப்பட்ட ஆதாய முரண்பாடுகளும் அவா்களுக்கு இருக்கக் கூடாது.
இத்தகைய தகுதியுடையவா்கள் வரும் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழுவின் பரிந்துரையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்






