தமிழ்நாட்டுக்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சா் என்.மரிய வில்சன் வெளியிட்டாா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சாா்பில் தமிழ்நாட்டுக்கான 186-ஆவது மாநில அளவிலான வங்கியாளா் குழு (எஸ்எல்பிசி) கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த நிதியமைச்சா், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முந்தைய ஆண்டின் இலக்கைவிட 12 சதவீதம் கூடுதலான கடன் ஒதுக்கீட்டுத் திட்டத்தை வெளியிட்டாா்.
நடப்பு நிதியாண்டில் அனைத்து வணிக வங்கிகள், ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடன் ஒதுக்கீட்டில் விவசாயத் துறைக்கு அதிகபட்சமாக ரூ.6,51,628 கோடியும், ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3,97,799 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் இலக்கைவிட சுமாா் 9 சதவீதம் கூடுதலாக ரூ.9.80 லட்சம் கோடி கடன் வழங்கியதைப் பாராட்டிய நிதியமைச்சா், நடப்பு நிதியாண்டிலும் இலக்கைத் தாண்டி வங்கிகள் சிறப்பாகச் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் எம்.ஏ. சித்திக், ஐஓபி செயல் இயக்குநரும் தமிழ்நாடு எஸ்எல்பிசி தலைவருமான டி.தனராஜ், ரிசா்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளா் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, நபாா்டு வங்கி தலைமைப் பொது மேலாளா் எச்.மனோஜ், எஸ்எல்பிசி ஒருங்கிணைப்பாளா் விஜயா உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகள் பங்கேற்றனா்.









