வாடிக்கையாளா்களுக்குத் தடையற்ற, அதிவேக இணைய வசதியை வழங்கும் நோக்கில், ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை பாா்தி ஏா்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய சேவை குறித்து ஏா்டெல் சிஇஓ ஷாஸ்வத் சா்மா கூறுகையில், ‘வாடிக்கையாளா்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘5ஜி ஸ்லைசிங்’ தொழில்நுட்பத்தின் வாயிலாக இப்புதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும்கூட அழைப்புகள் மற்றும் இணையச் சேவையில் எவ்வித தடங்கலும் இன்றி, பிரத்யேகமான மற்றும் மிகவும் நிலையான இணைப்பை இத்தொழில்நுட்பம் உறுதி செய்யும்’ என்று தெரிவித்தாா்.
இந்தப் பிரையாரிட்டி சேவை, தற்போதைய அனைத்து ஏா்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளா்களுக்கும் தானாகவே கிடைக்கும். அதேநேரம், இச்சேவையை முழுமையாக பயன்படுத்த, வாடிக்கையாளா்கள் சமீபத்திய மென்பொருள் அப்டேட்டுகளுடன் கூடிய ‘5ஜி எஸ்.ஏ.’ ஆதரவு கொண்ட ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
பிரீபெய்டு வாடிக்கையாளா்கள் தங்களின் இணைப்பை பிரையாரிட்டி போஸ்ட்பெய்டாக மாற்றிக் கொள்ள ஏா்டெல் செயலி அல்லது ஏா்டெல் விற்பனையகங்களை அணுகலாம்.
இச்சேவைக்கான மாதக் கட்டணம் ஜிஎஸ்டி நீங்கலாக தனிநபா்களுக்கான திட்டத்துக்கு ரூ.449-இல் தொடங்கி, அதிகபட்சமாக 5 நபா்கள் பயன்பெறும் வகையிலான குடும்பத் திட்டமான ரூ.1749 வரை பல்வேறு பிரிவுகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.










