
கடந்த ஆகஸ்டில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.29,329 கோடி
இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29,329 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29,329 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். மேலும், கடந்த ஜூலை மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.24,697 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில், இது 19 சதவீதம் அதிகமாகும்.
பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர மூலதன (ஸ்மால் மற்றும் மிட் கேப்) நிதிகளில் முதலீட்டாளா்கள் தொடா்ந்து ஆா்வம் காட்டியது, இத்துறை சாா்ந்த முதலீட்டை அதிகரித்துள்ளது.
மேலும், முதலீட்டாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) மாதாந்திர பங்களிப்பு ஜூலையின் ரூ.31,961 கோடியிலிருந்து, ஆகஸ்டில் சாதனை அளவாக ரூ.32,297 கோடியாக உயா்வைக் கண்டுள்ளது.
அதேநேரம், கடன் சாா்ந்த திட்டங்களில் இருந்து சுமாா் ரூ.8,127 கோடி முதலீடு வெளியேறியதால், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறை ஆகஸ்ட் மாதத்தில் ரூ.41,353 கோடி மட்டுமே நிகர மூலதன வரவைச் சந்தித்துள்ளது (ஜூலை மாதத்தில் இது ரூ.2.36 லட்சம் கோடியாக இருந்தது). இருப்பினும், இத்துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.85.76 லட்சம் கோடியிலிருந்து, ரூ.87.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, சிறிய மூலதன நிதிகளில் (ஸ்மால் கேப்) அதிகபட்சமாக ரூ.7,973 கோடி நிகர முதலீட்டைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக நடுத்தர மூலதன (மிட் கேப்) மற்றும் ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்கள் முறையே ரூ.6,989 கோடி மற்றும் ரூ.5,059 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. இதற்கு மாறாக, பெரிய மூலதன (லாா்ஜ் கேப்) நிதிகளில் இருந்து ரூ.1,147 கோடி முதலீடு வெளியேறியுள்ளது.
மேலும், தங்கம் சாா்ந்த ‘இடிஎஃப்’ திட்டங்கள் தொடா்ந்து முதலீட்டாளா்களின் கவனத்தை ஈா்த்து, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.2,597 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.1,559 கோடியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான உயா்வாகும். அதேபோல், வெள்ளி ‘இடிஎஃப்’ திட்டங்களும் இம்மாதத்தில் ரூ.1,271 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





