மானுடப் பரிணாம வளர்ச்சியில், பண்பாட்டுப் பரிணாமம் - big-bang of human cultural evolution என்று சொல்லப்படும் நிகழ்வு அது - நம்மில் நிகழ்ந்த காலம் என்பது 40,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்கிறார்கள் தொல்-மானுடவியலாளர்கள். ஆனால், இன்றைய மானுட மூளையின் தன்மையை 2,00,000 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் வந்தடைந்துவிட்டோம். எனில், ஏன் இந்த 150,000 ஆண்டுகள் இடைவெளி? தொல் மானுடப் பண்பாடுகளை ஆராயும் ஸ்டீவ் மித்தென் (Steve Mithen), இது ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்பட்டதாக ஊகிக்கிறார். மனித மூளையில் மூன்று தனித்தனி விதச் செயல்பாட்டு அமைப்புகள் இருந்தன என்கிறார். ஒன்று, பகுப்பாய்ந்து அறிவதற்கென ஒரு தனியாக நியூரானிய அமைப்பு; மற்றொன்று, சமூக அறிவுத்திறனுக்கானது. இன்னொன்று, கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தும் தன்மை கொண்டது. ஏதோ ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த மரபணு மாற்றத்தால், இந்த மூன்றும் ஒருங்கிணையும் நிலை மானுடத்தில் ஏற்பட்டது. பின்னர் அதுவே பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை உருவாக்கி அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்தியது.