அருகிவரும் அர்ப்பணிப்பு உணர்வு

அரிஸ்டாட்டில், தம் மாணவர்கள் பலருடன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு வந்தார். அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்பதால், ""நீங்கள் இங்கேயே இருங்கள், ஆற்றில் சுழல் இருக்கிறதா என பார்த்து வருகிறேன்'' எனக்கூறி ஆ
அருகிவரும் அர்ப்பணிப்பு உணர்வு
Updated on
2 min read

அரிஸ்டாட்டில், தம் மாணவர்கள் பலருடன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு வந்தார். அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்பதால், ""நீங்கள் இங்கேயே இருங்கள், ஆற்றில் சுழல் இருக்கிறதா என பார்த்து வருகிறேன்'' எனக்கூறி ஆற்றில் இறங்க ஆயத்தமானார். அதற்குள் ஒரு மாணவன் ஆற்றில் இறங்கி அக்கரை வரை சென்று வந்தான்.

 அந்த மாணவனைக் கண்ட அரிஸ்டாட்டில், ""உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றால் என்னவாகி இருக்கும்?'' எனக்கேட்டார். அதற்கு அம்மாணவன், ""ஆயிரம் அரிஸ்டாட்டில்களை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர் நீங்கள். அத்தகைய அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப் போய்விடுவோம்'' என்றான். இதைக்கேட்ட அரிஸ்டாட்டில் உளம் மகிழ்ந்து போனார்.

 இப்படியான ஆசிரியர் மாணவர் உறவு அப்போது இருந்தது. இதனால் ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வும், மாணவர்களிடம் குருபக்தியும் இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எண்ணும்போது ஏன் இந்த மாற்றம், இதற்கு யார் காரணம், என்னதான் தீர்வு என்பன போன்ற கேள்விகள் நம்முள் எழத்தான் செய்கின்றன.

 பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே கல்வியின் அவசியம் பற்றிக் கூறியது நம் தமிழ்ச் சமூகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள், அதற்கு முன்பாகவே எழுதப்பட்ட புற நானூறு போன்ற இலக்கியங்களில் கல்வியின் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. அத்தகைய, கல்வியை போதிக்கும் ஆசான்கள் ஒவ்வொரு குழந்தைகளிடமும் உள்ள அறிவைத் தீட்டி கல்வி எனும் ஒளிக்கீற்றை வெளிக்கொணரச் செய்பவர்கள்.

 அதனால்தான் அந்தக்காலம் தொட்டு இதுநாள் வரையில் மாதா, பிதா, குரு தெய்வம் என ஆசிரியர்கள் நிலை பற்றியும், ஆசிரியப்பணி அறப்பணி என ஆசிரியப் பணியைப்பற்றியும் கூறிவருகிறோம். காலப்போக்கில் கல்வி முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் ஆசிரியப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்பதில் மாற்றங்கள் எதுவும் இல்லையே?

 அந்தக்காலத்தில் கல்வி பயில குருகுல வாசம் செய்ய வேண்டும். குருகுல வாசம் என்றால் மாதா, பிதாவைப் பிரிந்து குருவிடமே சென்று வசிக்க வேண்டும். ஒரு மாணவர் வாழ்வில் மாதா, பிதா ஸ்தானத்தை முற்றிலும் ஈடு செய்யும் மகானே நிஜமான குரு ஆவார். மாதாவின் அன்பும், பிதாவின் கண்டிப்பும் கலந்த ஆச்சர்யமான கலவையாக ஆசிரியர் இருக்க வேண்டும்.

 பாடங்களைக் கற்பிப்பதுடன் மாணவர்களின் உள்ளுணர்வை அறிதல், ஆளுமையை வளர்த்தல், தகவல்களைச் சேகரித்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், கற்றதைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்தல் ஆசிரியர்களின் பொறுப்பாகும். இவைதான் நல்ல ஆசிரியர்க்கு அடையாளமாகவும் கருதப்படுகிறது.

 குழந்தைகள் ஒரு நாளின் பெரும்பகுதியை ஆசிரியருடன்தான் கழிக்கின்றனர். பள்ளிப்பருவம் என்பது சமுதாய வாழ்வின் ஆரம்பம் என்பதால், பாடங்களுடன் பிறவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பள்ளிக் குழந்தைகளிடையே திறமைகள் வளர்க்கப்பட வேண்டியிருப்பதால் ஆசிரியர்கள் அவர்களைப் பற்றிய அக்கறை கொண்டவர்களாகவும், அவர்களிடம் பரிவுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

 ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் சற்று வித்தியாசமானது. மாறுபட்ட குணங்கள், தோற்றங்கள், நடத்தைகள், சிந்தனைகள் என பல்வேறுபட்ட குழந்தைகள் இருப்பார்கள். அவர்களின் மழலைப் பேச்சும், அவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் அனுபவமும் புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்வதாக இருக்கும்.

 ஆசிரியப் பணி அறப்பணி என்று போற்றப்படக் காரணம், கடமையைத் தாண்டி உளப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், உண்மையான அக்கறையோடும் செய்யப்பட வேண்டிய பணி என்பதாலேயே அவ்வாறு புகழப்படுகிறது. சொல்லப் போனால், இவர்கள் ஆற்றுவது பணியல்ல, தொண்டு.

 சிறந்த ஆசிரியர் என்பவர் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியப்பணி சிறப்பாக அமைய முடியும். மாணவர்களைச் சிறந்த பண்பாளராக மாற்ற முயற்சிக்கும் ஆசிரியர்கள் முதலில் சிறந்த பண்பாளராக இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும். ஒரு மாணவர் தவறு செய்தால் அச்செயல் அம்மாணவரையும், அவரைச் சார்ந்தவரையும் மட்டுமே பாதிக்கும். ஆனால் ஓர் ஆசிரியர் தவறு செய்தால் எட்டப்படாத அளவிற்கு எதிர்காலச் சந்ததியினர் பாதிக்கப்படுவர்.

 வகுப்பறை என்பது நான்கு பக்கமும் சுவர்களைக் கொண்டுள்ள அறையாக மட்டுமே இருக்கக் கூடாது. எதிர்காலச் சமுதாயத்திற்கு தேவையான சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது எனக்கூறுவதுண்டு.

 அதற்கு ஆசிரியர்கள் உறுதி ஏற்பதுடன், தங்களைத் தாங்களே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com