பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 3
படமெடுத்து ஆடுகிற நாகத்தை இடுப்பில் கட்டியிருக்கிற தலைவன், சிவபெருமான்,


தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.
பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.
இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடலின்பம்
அரைஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின்மேல்
வரைஆடும் மங்கை தன் பங்கொடு வந்து ஆண்ட திறம்
உரைஆட உள்ஒளிஆட ஒள்மாமலர்க் கண்களில் நீர்த்
திரையாடுமா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.
*
ஆஆ அரி, அயன், இந்திரன், வானோர்க்கு அரிய சிவன்
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூஆர் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே
தே ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.
பொருளின்பம்
படமெடுத்து ஆடுகிற நாகத்தை இடுப்பில் கட்டியிருக்கிற தலைவன், சிவபெருமான்,
அத்தகைய சிவபெருமான், மலைமகளான உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டு பூமியில் தோன்றினான், நம்மை ஆண்டான், அந்தக் கருணையைப் பேசினால், சொற்கள் தடுமாறுகின்றன, உள்ளத்தில் ஒளி பெருகுகிறது, ஒளிர்கிற பெரிய மலர் போன்ற கண்களில் நீர் அலையலையாகப் பொங்குகிறது, அந்தத் தன்மையைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
அடடா, திருமால், பிரம்மன், இந்திரன், மற்ற வானோர்கள் எல்லாருக்கும் அரியவனாக இருக்கும் சிவபெருமான், எனக்காகப் பூமியில் வந்தானே, தானே என்னை வா என்று அழைத்து ஆட்கொண்டானே, அவனுடைய மலர்போன்ற திருவடிகளை என் தலையில் சூடிக்கொண்டதும், நானும் தெய்வத்தன்மை அடைந்தேனே, இந்தத் தன்மைகளைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
சொல்லின்பம்
அரை: இடுப்பு
அசைத்த: கட்டிய
அவனி: பூமி
வரை: மலை
திறம்: தன்மை
உரை: பேச்சு
ஒள்: ஒளிர்கிற
மா: பெரிய
திரை: அலை
அரி: திருமால்
அயன்: பிரம்மா
பூதலம்: பூமி
வலித்து: வலியவந்து
ஆர்: போன்ற
தே: தெய்வம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...