/

பகுதி - 333

நீ வேறு, நான் வேறு என்றில்லாமல் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுகூடியதான

Updated On :12 அக்டோபர் 2016, 10:09 am

பதச் சேதம்

சொற் பொருள்

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நால் ஆறு நாலு பற்று(ம்) வகையான

 

நா ஏறு: நாவில் ஏறிய, ஊறிய; பா மணத்த பாதாரம்: பாட்டின் மணம் கமழும்; பாதாரம்: பாதாரவிந்தம், திருவடித் தாமரை; நாலாறு நாலு: (4x6+4) இருபத்தெட்டு வகையான சிவாகமங்கள்;

நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள் தோறும் நான் உரைத்த நெறியாக

 

நாலு ஆரும்: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள் பொருந்திய; ஆகமத்தின் நூலாய: ஆகம நூல்களில் கூறப்பட்ட;

நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர

 

 

நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே

 

ஷடாதரம்: ஆறு ஆதாரங்கள்—மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா எனப்படுபவை; அனைசொல்: அனைய சொல் (ஐக்கியத்தைத் தரும் சொல்);

சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குரு நாதா

 

சே: காளை, நந்தி; சுற்ற: வலம் வந்து நிற்க;

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா

 

தேரார்: பகைவர் (தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்—குறள்); சூரார்: சூரர்;

காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே

 

வாவி: தடாகம், குளம்; கா ஆர்: சோலைகள் நிறைந்த; சுவாமி வெற்பு: சுவாமி மலை;

கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காம ஆரி வாமி பெற்ற பெருமாளே.

 

கார்போலும் மேனி: கரிய மேகத்தைப் போன்ற மேனி; வாலை: பாலா; காமாரி: மன்மதனை (காமனை) எரித்தவன்; வாமி: வாம பாகத்திலே இருப்பவள்;

நாவேறு பாம ணத்த ... (நல்ல பக்தர்களின்) நாவிலே ஊறியதாகிய பாடல்களுடைய நறுமணம் கமழ்கின்றதான,

பாதாரமே நினைத்து ... திருவடித் தாமரைகளையே நினைத்து,

நாலாறு நாலு பற்று வகையான ... இருபத்தெட்டு வகையான சிவாகமங்களின் தொடர்புடையதும்,

நாலாரும் ஆகமத்தின் ... சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள் பொருந்தியதுமான சிவாகம

நூலாய ஞான முத்தி ... நூல்களிலே சொல்லப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே,

நாடோறு நானு ரைத்த நெறியாக ... தினந்தோறும் (எப்போதும்) நான் அனுசரிக்கும் நெறியாக விளங்கவும்,

நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க... நீ வேறு, நான் வேறு என்றில்லாமல் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுகூடியதான ஐக்கிய நிலையில்,

நேராக வாழ்வதற்குன் அருள்கூர ... நேரான வகையில் வாழ்ந்திருப்பதற்கு உன் அருள் பெருகி,

நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே ... பரந்துபட்டதான (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற) ஆறு ஆதாரங்களைக் கடந்து (ஸஹஸ்ராரத்தில்),

பராபரத்தை நீகாணென ... ‘பெரிவற்றுக்கெல்லாம் பெரியதான பராபரமான சிவத்தை நீ காண்பாய்’ என்ற,

ஆவனைச்சொல் அருள்வாயே ... ஐக்கிய வசனமாகிய அனைச்சொல்லை உபதேசித்து அருளவேண்டும்.

சேவேறும் ஈசர் சுற்ற ... நந்தியை வாகனமாக ஏறுகின்ற ஈசனான சிவனார் உன்னை வலம்வந்து நிற்க, (அவருக்கு)

மாஞான போத புத்தி ... பெரிதான ஞானோபதேசத்தை,

சீராகவே உரைத்த குருநாதா ... செம்மையாகவே எடுத்துரைத் குருநாதனே!

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு ... பகைவர்க(ளான தேவர்களுடைய) நாட்டை எரித்த அசுரர்கள் மாளும்படியாக வெட்டியவனே!

தீரா குகா குறத்தி மணவாளா ... தீரனே!  குகனே!  குறத்தி மணவாளனே!

காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த ... காவேரி ஆற்றின் நேர் வடக்கில் இருப்பதும்; குளங்களிலே மணம் மிகுந்த பூக்கள் நிறைந்திருப்பதும்;

கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே ... சோலைகளால் சூழப்பட்டதுமான சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகனே!

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி ... மேகத்தைப் போன மேனி கருத்தவளான மாகாளி, பாலை, சக்தி,

காமாரி வாமி பெற்ற பெருமாளே. ... மன்மதனை எரித்த சிவனாரின் இடது பக்கத்தில உறைபவளான உமாதேவி பெற்ற பெருமாளே!

சுருக்க உரை

நந்தியை வாகனமாகக் கொண்ட பரமர் வலம் வந்து நிற்க அவருக்கு ஞானோபதேசத்தைச் செம்மையாக வழங்கிய குருநாதனே!  தேவர்களுடைய ஊரைச் சுட்டெரித்த அசுரர்களை வெட்டி வீழ்த்தியவனே!  தீரனே!  குகனே! குறத்தி மணாளனே!  காவேரியாற்றுக் நேர் வடக்கிலிருப்பதும்; குளங்களில் மணம் மிகுந்த பூக்கள் நிறைந்ததும்; சோலைகளால் சூழப்பட்டதுமான சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே!  கரிய மேகத்தைப் போன்ற மேனியை உடைய மாகாளியும்; என்றும் இளமை மாறாத பாலையும்; மன்மதனை எரித்த சிவனாருடைய இடதுபாகத்திலே வீற்றிருப்பவளுமான உமாதேவியார் பெற்றவனே!  பெருமாளே!

நல்ல அடியார்களுடைய நாவிலே ஊறியதான பாடல்களுடைய மணம் வீசுகின்ற உன் திருவடித் தாமரைகளையே தியானித்து; இருபத்தெட்டு வகையானதும், நான்கு பாதங்கள் பொருந்தியதுமான; ஆகம நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஞான முக்தி நெறியை நான் எப்பாதும் அனுஷ்டிக்கும்படியும்; ‘நீ வேறு, நான் வேறு’ என்றில்லாமல் இருவரும் ஒருவரேயாகும் ஐக்கிய நிலையில் நான் வாழும் நிலையை அருளவேண்டும்; ஆறு ஆதாரங்களைக் கடந்த ஸஹஸ்ராரத்தில் உள்ள பரம்பொருளைக் ‘இதோ காண்பாய்’ என்று உணர்த்தியருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.