/

பகுதி - 406

இன்றைய பாடல் விராலி மலைக்கானது. 

Updated On :10 நவம்பர் 2016, 6:30 pm

ஞானசித்தி பெறுவதை வேண்டும் இன்றைய பாடல் விராலி மலைக்கானது.  ‘தகுதியே இல்லாத யார்யாரோ குரு என்ற ஸ்தானத்தைப் பெற்று, நமக்கு அளிக்கின்ற ஞானோபதேசமானது நமக்குத் தஞ்சமாக விளங்குமா?  இவர்கள் கொடுக்கின்றவற்றுள் உண்மையான ஞானசித்தி என்பதை நான் பார்க்கவில்லையே!  (ஆகவே நீயே எனக்கு குருவாக இருந்து உபதேசித்தருள வேண்டும்) என்று இப்பாடலில் கோருகிறார்.  ‘இராசரிக்கர்’ என்ற சொல் இதில் பயில்வதைப் பார்க்கலாம்.  ராஜரீகம் என்பதே அது.  திருமாலுடைய கண்ணன், வாமனன் அவதாரங்களைப் பாடுகிறது.  கூன்பாண்டியனுடைய கூனை நிமிர்த்திய கதையையும் பாடுகிறது.

அமைப்புமுறை என்று பார்த்தால் அடிக்கு ஒற்று நீக்கி 28 எழுத்துகள்; 5, 13, 21 ஆகிய எழுத்துகள் நெடில்; ஒற்றோடு 7, 15, 23 ஆகிய எழுத்துகள் வல்லொற்று.  தொங்கல் சீரில் மட்டும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.

தனதன தான தத்த தனதன தான தத்த
      தனதன தான தத்த                  தந்ததான

உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
         யுடனாக ஆக மத்து    -  கந்துபேணி
      உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
         யொழியாது வூதை விட்டி   -  ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
         தருவார்கள் ஞான வித்தை -  தஞ்சமாமோ
      தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
         தருமாகி லாரு மத்தை   -     கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
         குடிமாள மாய விட்டு  -    குந்திபாலர்
      குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
         குறளாக னூறில் நெட்டை   - கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
         மலைமே லுலாவு சித்த  -  அங்கைவேலா
      மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
         வளைகூனை யேநி மிர்த்த -    தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.