/

பகுதி - 410

திருவடி தீட்சையைக் கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.

Updated On :14 நவம்பர் 2016, 6:30 pm

‘சந்தப் படியுற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து அருள்வாயே’ என்று திருவடி தீட்சையைக் கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  இதன் சந்த அமைப்பு சற்றே சிக்கலானது.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ‘நேர்நேர்’ என்ற அமைபையும் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ‘நிரைநிரை’ என்ற அமைப்பையும் கொண்டவை.  ஒன்று, மூன்று ஐந்து ஆகிய சீர்கள் இரண்டு ஒற்றுகளைக் கொண்டுள்ளன; இந்த இரண்டு ஒற்றுகளில் முதல் ஒற்று மெல்லினம், இரண்டாம் ஒற்று வல்லினம்.  

உதாரணத்துக்கு, ‘தந்தம்’ என்றொரு சொல்லிருந்தால் இந்தச் சொல்லில் கடைசியாக வரும் எழுத்தான ‘ம்’ வல்லொற்றாக மாறவேண்டுமானால், இந்தச் சொல்லுக்கு அடுத்த சொல் வல்லெழுத்தில் தொடங்க வேண்டும்.  தந்தம் என்பதைத் தொடர்ந்து பலகை என்ற சொல் வந்தால்தான் அது ‘தந்தப் பலகை’ என்று மாறும்.  ஆகவே, இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் வல்லெழுத்தில் மட்டுமே தொடங்க முடியும்.  அப்படித்தான் தொடங்கியிருக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்.  

மூன்றாமடியும் அதன் மடக்கும் ‘அ’ என்ற உயிரெழுத்தில் தொடங்கியிருக்கின்றன.  ஆனால் அவை சந்தம் முடிகின்ற இடத்தை அடுத்து வருவதால் அந்த இடங்களில் விட்டிசைக்கப்படுகின்றன.  எனவே அங்கே வல்லெழுத்தில் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.  இதற்கு மாறாக அதே மூன்றாமடியில் ‘கந்திக் கடலில்’, ‘றஞ்சப் பொருதுற்’ என்ற துணை மடக்குகளில் அகரம் புணர்ச்சி பெற்று வல்லெழுத்தாக மாறுவதைக் காணலாம்.  இத்தனைச் சிக்கலான சந்த அமைப்பாக இருந்தாலும் சொற்கள் மிக இயல்பாக, தங்குதடையில்லாமல் வந்து விழுவதையும் காண்கிறோம்.   .

 தந்தத் தனனத் தந்தத் தனனத்
      தந்தத் தனனத்            -        தனதான

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
         கொண்டற் குழலிற் -  கொடிதான
      கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
         கொஞ்சுக் கிளியுற்    -    றுருவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
         சந்திப் பவரைச்       -       சருவாதே
      சந்தப் படியுற் றென்றற் றலையில்
         சந்தப் பதம்வைத்     -    தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
         கந்திக் கடலிற்      -      கடிதோடா
      அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
         றஞ்சப் பொருதுற்     -    றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
         சென்றுற் றவர்தற்    -     பொருளானாய்
      சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
         செந்திற் குமரப்      -         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.