/

பகுதி - 711

திருமகள் உறையும் மார்பையும்

News image
Updated On :9 டிசம்பர் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

இரவியும் மதியும் தெரிவு உற எழும் அம் புவி தனில் இனம் ஒன்றிடு மாதும்

 

இனம் ஒன்றிடு(ம்):
சுற்றமாக விளங்கிடும்;
மாதும்: மனைவியும்;

எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற

 

நடலம்: துன்பமொழிகள்;

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன்

 

 

கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய்

 

அகலிட: அகன்றிட;

திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன்

 

திரு மருவிய திண்புயன்:
திருமால்; அயன்: பிரமன்;

திணி புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா

 

திணி புயம்: வலிமை
வாய்ந்த புயம்; வலியொடு: வலிமையோடு; கன்றிடும்: சினந்திடும்;

அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும்

 

அந்தரம்: ஆகாசம்—
தேவலோகம்; உய: உய்ய;

அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே.

 

 

இரவியு மதியுந் தெரிவுற எழும் அம்புவிதனில் இனம் ஒன்றிடுமாதும்... சூரிய சந்திரர்கள் விளக்கமுறத் தோன்றுகின்ற இந்த பூமியிலே உறவென்று பொருந்துகிற மனைவியும்,

எழில்புதல்வரும் நின்றழுது உளமுருகும் இடர்கொடு நடலம் பலகூற... அழகிய மக்களும் சுற்றிலும் நின்றபடி அழுது, உள்ளத்தை உருக்குகின்ற வருத்தத்தோடு துன்பமொழிகள் பலவற்றைப் பேச,

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டு உயிரினை நமனுங் கருதாமுன்... கரிய உருவத்தையும் கனல்வீசும் கண்களையும் கொண்ட யமன் என் உயிரைப் பறித்துச் செல்ல எண்ணி வருவதற்கு முன்னால்,

கலைகொடு பல துன்பமும் அகலிட நின் கழலிணை கருதும் படிபாராய்... பெற்றிருக்கின்ற நூற் பயிற்சியும் என் துன்பங்களும் என்னைவிட்டு நீங்கும்படியாக உன்னுடைய திருப்பாதங்களையே நான் தியானித்திருக்கும்படியாக அருள்செய்ய வேண்டும்.

திருமருவியதிண் புயன் அயன் விரியெண்டிசை கிடுகிட வந்திடுசூரன்... திருமகள் உறையும் மார்பையும் திண்மையான புயங்களையும் கொண்ட திருமாலும் பிரமனும் எட்டுதிசைகளிலும் உள்ள எல்லோரும் நடுங்கும்படியாக வந்த சூரனுடைய,

திணிபுயமது சிந்திட அலை கடலஞ்சிட வலியொடு கன்றிடும்வேலா... வலிமை மிக்க புயங்கள் அறுபட்டு விழும்படியும்; கடல் அஞ்சும்படியும் வலிய சினத்தைக் காட்டிய வேலா!

அருமறையவர் அந்தரம் உறைபவர் அன்புடையவர் உ(ய்)ய... அரிய மறைகளில் வல்லவர்களும் வானில் உறைகின்ற தேவர்களும் அன்புகொண்ட அடியவர்களும் உய்யுமாறு,

அன்று அறமேவும் அரிவையும் ஒருபங்கு இடமுடை யவர்தங்கு அருணையி லுறையும் பெருமாளே.... அன்று (முப்பத்திரண்டு)* அறங்களைச் செய்த உமையம்மையை தம் இடதுபாகத்தில் கொண்டவரான சிவனார் இருக்கின்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* அறங்கள் முப்பத்திரண்டு என்பதைப் பெரியபுராணம் சொல்கிறது.  இந்த விவரத்தை நம் 695ம் தவணையில் காண்க.)


சுருக்க உரை:

திருமகள் வீற்றிருக்கும் மார்பையும் திண்ணிய தோள்களையும் உடைய திருமாலும் பிரமனும் எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் நடுங்கும்படியாக வந்த சூரனுடைய தோள்கள் அறுபட்டு விழும்படியும் கடல் அஞ்சும்படியும் சினந்த வேலா! மறையவர்களும் தேவர்களும் அடியார்களும் உய்யும்படியாக முப்பத்திரண்டு அறங்களைச் செய்த உமையைத் தன் இடதுபாகத்தில் கொண்டிருக்கும் அரனார் உறைகின்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சூரிய சந்திரர்கள் தோன்றி விளங்குகின்ற இந்த உலகிலே பொருந்திய உறவினர்களாக விளங்கும் மனைவியும் மக்களும் சுற்றிலும் நின்று அழுதபடி துக்கமொழிகளைப் பேசும்படியாகக் கரிய உருவமும் கனல்வீசும் கண்களும் உடைய காலனார் தோன்றி என் உயிரைக் கவர்ந்துபோவதற்கு முன்னால் நான் கற்ற கலைகளும் என் துன்பங்களும் ஒருங்கே நீங்கும்படியாக நான் உன் திருவடிகளை தியானித்திருக்கும்படியாக அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.