/

பகுதி - 699

பொன்னம்பலத்தில் நின்று ஆடுகின்ற

News image
Updated On :22 நவம்பர் 2017, 4:41 am

பதச் சேதம்

சொற் பொருள்

வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்) கொண்டல் அதனோடும்

 

வண்டார்: வண்டு ஒலிக்கின்ற என்ற பொருள் இருந்தாலும், திணைவழுவமைதியாக ‘வண்டு’ என்றே பொருள்படும்; மதங்கள்: தேனை; ஊரும்: மொய்க்கும்; கொண்டல்: மேகம், மேகத்தை ஒத்த கூந்தல்;

வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும்

 

கால்மடங்க: ஆற்றல் குறைவுபட; மலைத்த: போர்தொடுத்த;

கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி

 

தியங்க: சஞ்சலம் கொள்ள;

கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன்றன் அருள் தாராய்

 

கொந்து: கொத்து;

பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே

 

ஆழி: சக்கரம்; (இரண்டாவது) ஆழி: கடல்; பண்போன்: தன்மையேன் (இங்கே திருமால்);

பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா

 

நைந்து: நெகிழ்ந்து;

செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே

 

செண்டாடி: செண்டால் (அசுரர்களைப்) புடைத்து; அண்டர்: தேவர்கள்; மன்றில் நின்றாடி: அம்பலத்தில் நின்று ஆடும் சிவனார்;

செம் சாலி மிஞ்(ச) மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே.

 

செஞ்சாலி: செந்நெல்; மிஞ்ச: மிகுதியாக; மஞ்சு: மேகம்; செங்கோடு: திருச்செங்கோடு;

வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்) கொண்டல் அதனோடும்...

வண்டுகள் தேனை உண்டதால் மயக்கத்துடன் மொய்க்கின்ற மேகத்தை ஒத்த கூந்தலையும்;

வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும்... வளமை நிறைந்த மன்மதனுடைய மலரம்புகளின் வேகமும் குறைந்துபோகும்படி கொடிய போரைத் தொடுக்கின்ற விழியாகிய வேலையும்,

கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி... கொண்டு வளைப்பதனால் பார்ப்பவர்களை சஞ்சலப்படுத்துகின்ற பெண்களின் தென்னங் குரும்பையை ஒத்த மார்பிலே மனம் சஞ்சரித்து;

கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன் தன் அருள் தாராய்... பூங்கொத்துகள் நிறைந்திருக்கன்ற உன்னுடைய திருவடிகளை மறந்து நான் சோர்வடையாதபடி உன்னுடைய திருவளைத் தந்தருள வேண்டும்.

பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே... ஆதிகாலம்  தொட்டே சக்கரத்தையும் சங்கையும் ஏந்தியபடி பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் தன்மையனான திருமால் மகிழும் மருகா!

பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா... இசையோடு பொருந்தி (அதனால்) உள்ளம் நெகிழ்ந்து உன்னைப் போற்றும் அடியார்களுடைய பக்கத்தில் நிற்கின்ற குமரேசா!

செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே... (அசுரர்களைச்) செண்டு கொண்டு புடைத்தவனே!  தேவர்கள் கொண்டாடுபவனே!  பொன்னம்பலத்தில் நின்று ஆடுகின்ற சிவனாருடைய உள்ளத்தை மகிழ்வுறுத்தும் செல்வமே!

செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே.... செந்நெல் செழித்து வளரும்படியாக மேகங்கள் திரிகின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே!


சுருக்க உரை:

ஆதி நாளிலிருந்து பாற்கடலில் சங்கையும் சக்கரத்தையும் தரித்த கோலத்தில் அறிதுயில் கொண்டிருக்கும் திருமால் மகிழ்கின்ற மருகா!  இசையோடு பொருந்திய துதிமொழிகளைப் பாடி உள்ளம் உருகுகின்ற அன்பர்களுடைய பக்கத்திலே நிற்கின்ற குமரேசா!  அசுரர்களைச் செண்டுகொண்டு புடைத்தவனே! தேவர்களால் கொண்டாடப்படுபவனே!  பொன்னம்பலத்தில் நின்றாடும் சிவனார் மனத்தை மகிழ்விக்கும் செல்வமே! செந்நெல் செழித்து வளரும்படியாக மேகங்கள் திரிகின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே!

தலையிலே சூடிய பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் மொய்க்கின்ற மேகத்தைப் போன்ற கரிய கூந்தலையும்; மன்மதனுடைய மலரம்பின் வேகத்தையும் அடங்கச் செய்யும்படியாகப் போர்தொடுக்கும் விழியாக வேலையும் கொண்டு, வளைத்து, கண்டவர்களை மயங்கச் செய்கின்ற பெண்களுடைய தென்னங் குரும்பையை ஒத்த மார்பில் மனம் பொருந்தி நிற்பதனால்,

பூங்கொத்துகள் நிறைந்திருக்கும் உன்னுடைய திருவடிகளை மறந்து நான் அழிவடையாதபடி உன்னுடைய பேரருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.