ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 673

பொய்மையால் ஆன இந்தக் காற்றுப் பையை

News image
Updated On :24 அக்டோபர் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அப் பதத்தினை பரிவோடே

 

குரு: நிறம்; திறல்: ஒளி; குருத்திறல் கரம்: நிறத்தையும் ஒளியையும் கொண்ட கரம்; பரித்த: தாங்குகின்ற; பரிவோடே: அன்புடனே;

படைத்த பொய் குடத்தினை பழிப்பவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும்

 

பொய்க் குடம்: பொய்யான குடத்தைப் போன்ற உடல்; பழிப்பவத்து: பழி, பாவத்து (‘பாவத்து’ என்பது ‘பவத்து’ என்று குறுகியது); பயம் மேவும்: அச்சம் பொருந்திய;

பெருத்த பித்த உரு தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்கு(ற்)றத்தொடு ஐபுலனாலும்

 

கிருத்திம: பொய்யான; துருத்தி: (கொல்லன் உலையில் பயன்படும்) காற்றுப் பை; முக்குறத்தொடு: முக்குற்றத்தோடு—காமம், வெகுளி, மயக்கம் என்பன மூன்று குற்றங்கள்; ஐப்புலன்: ஐம்புலன்;

பிணித்த இப்பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே

 

பிணித்த: பிணிக்கப்பட்ட; பிணிப்பை: நோய்ப் பை;

கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத் திருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா

 

தொறு: செழிப்பான (abundance)—செழிக்கச் செய்து, வாழ்வித்து; திருக்கர்: வஞ்சகர் (Crooks); கழித்த: கழித்து, ஒதுக்கி;

கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே

 

கதித்த: மிகுந்த; (இரண்டாவது) கதித்த: நடை பயின்ற (காளிங்கன் சிரத்திலேகதித்த பதத்திலே—ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்);  

செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து உரத்(து) அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா

 

தெறுத்து: பாய்ந்து; உரத்து: வலிமையை உடைய;

சிறப்பு உற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே.

 

பிரித்து: தனிப்பட்டு நின்று;

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினை பரித்தவப் பதத்தினை... பற்களைக் கொண்ட பருமனான தலையையும்; நல்ல நிறத்தையும் ஒளியையும் உடைய கைகளையும் தாங்குகின்ற பாதங்களையும்;
 
பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினை பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனை...(பெற்றோரின்) அன்பினால் படைக்கப்பட்டதும்; பொய்யால் அமைந்ததுமான பானைபோன்ற இந்த உடலை; பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை; பசியைக் கொண்ட குடலோடு கூடிய இந்த உடலை; அச்சத்தோடு பொருந்தி இந்தப் பித்த உருவத்தை;
 
கிருத்திமத் துருத்தியை பிணித்தமுக் குறத்தொடு ஐப் புலனாலும்... பொய்மையால் (மாயையால்) ஆன இந்தக் காற்றுப் பையை; காமம், வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களோடும்; ஐம்புலன்களோடும்,
 
பிணித்தவிப் பிணிப்பையை பொறுத்து அமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத்து எனக்களித்தருள்வாயே... பிணிக்கப்பட்டிருக்கின்ற நோய் நிறைந்த இந்தப் பையைத் தாங்கித் திரிந்து; இறப்பில் அமிழ்வதுமான இந்தப் பிறப்பு தொலைந்து போவதை நோக்கமாகக் கொள்வதை எனக்கு அளித்தருள வேண்டும்.
 
கருத்திலுற் றுரைத்தபத்தரை தொறுத் திருக்கரைக் கழித்த மெய்ப் பதத்தில்வைத்திடுவீரா... தம் கருத்தில் உன்னைப் பொருத்திப் போற்றிய அடியாரை வாழ்வித்து; வஞ்சகரை ஒதுக்கி (அடியார்களை) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்கின்ற வீரனே!
 
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியை கதித்தநற் றிருப்புயத்தணைவோனே... மிகுதியாக விளைந்திருக்கன்ற தினைப்புனத்திலே நடமாடிய குறத்தியான வள்ளியை உன் அழகிய புயத்தோடு அணைத்துக்கொண்டவனே!
 
செருத்தெறுத் தெதிர்த்த முப் புரத்து உரத்தரக்கரை சிரித்தெரித்த நித்தர்பொற் குமரேசா... போரிலே பாய்ந்து எதிர்த்தவரும்; திரிபுரங்களைச் சேர்ந்தவருமான அரக்கர்களை சிரித்தே எரித்தவரும்; அழிவற்றவருமான சிவனாரின் அழகிய மகனே!
 
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசை சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.... சிறப்பாகத் தனிப்பட்டு நின்று அறநெறிகளைக் கூறும் தமிழ்நாட்டின் உயர்வான வடதிசையில் இருக்கின்ற சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணிப் பெருமாளே!
 
சுருக்க உரை:
 
வஞ்சகர்களை ஒதுக்கி; உன்னை மனத்தில் இருத்திப் போற்றுகின்ற அடியார்களை உன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொள்பவனே!  மிகுதியான விளைச்சலை உடைய தினைப்புனத்தில் நடைபழகிய குறமகளான வள்ளியை உன் திருப்புயங்களோடு அணைத்துக்கொண்டவனே!  போரிலே பாய்ந்து வந்தரும் வலிமையை உடையவருமான திரிபுரத்து அரக்கர்களைச் சிரித்தே எரித்தவரும்; அழிவற்றவருமான சிவனாரின் அழகிய மகனே! சிறப்பாகத் தனித்து நின்று அறநெறிகளைக் கூறுகின்ற தமிழ்நாட்டின் வடதிசையிலே விளங்குகின்ற திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
 
பற்களை உடையதும் பருத்ததுமான தலையையும்; ஒளியும் நிறமும் பொருந்தியதுமான கரங்களையும்; இவற்றையெல்லாம் தாங்குகின்ற கால்களையும் கொண்டதும்; (பெற்றோரின்) அன்பாலே படைக்கப்பட்ட பொய்மையான குடம்போன்றதுமான இந்த உடலை; பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை; பசியோடு கூடிய இந்த உடலை; அச்சம் நிறைந்ததும் பித்தத்தால் எழுந்ததுமான இந்த உருவத்தை (உடலை); பொய்யான காற்றுப் பைபோன்ற இந்த உடலை; காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களோடும் ஐம்புலன்களோடும் பிணிக்கப்பட்டுள்ள இந்த நோய்ப் பையைத் தூக்கித் திரிந்து இறுதியில் இறப்பில் வீழ்கின்ற இந்தப் பிறவி என்னும் நோயை ஒழிக்கின்ற கருத்துடையவனாக என்னைச் செய்தருளவேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.