சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(14.03.1966)திறமைமிக்க 'பப்ளிக்' பள்ளிகளை ஸ்ரீ காமராஜ் விரும்பவில்லை

நாட்டில் உள்ள எல்லா 'பப்ளிக்' பள்ளிகளையும் மூடிவிட வேண்டுமென்று ஸ்ரீ காமராஜ் கூறினார்.

Updated On :16 மார்ச் 2015, 4:51 am

இந்த நாளில் அன்று

(14.03.1966)

திறமைமிக்க 'பப்ளிக்' பள்ளிகளை ஸ்ரீ காமராஜ் விரும்பவில்லை

நாட்டில் உள்ள எல்லா 'பப்ளிக்' பள்ளிகளையும் மூடிவிட வேண்டுமென்று ஸ்ரீ காமராஜ் கூறினார். ஒவ்வொரு பள்ளிப்பாடத்திலும் மிகுந்த திறமைசாலிகளை, உயர்ந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாக நியமித்து நடத்தப்படும் பள்ளிகளுக்கே 'பப்ளிக்' பள்ளிகள் என்று பெயர்.

நல்ல வசதி உள்ள பிள்ளைகள்தான் இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியும். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், திறமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள் என்றும், தகுதி என்ற பெயரில் போட்டி போட்டு, சாதாரணமான ஏழைப் பிள்ளைகளை இவர்கள் தோற்கடித்துவிட முடிகிறதென்றும் ஸ்ரீ காமராஜ் சொன்னார்.

எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்புகள் இருந்தால், ஏழைகள், பணக்காரர்கள் இருவரிடையேயும் உள்ள பிள்ளைகள் மலர்ச்சி பெற முடியும். சாதாரண பிள்ளைகளின் பெற்றோர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களும் படித்தவர்களிடையே வளரவில்லை. ஆகையால், ஏழைகளுக்குப் பிரதிகூலம் இருக்கிறது. எனவே, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த பிள்ளைகள் விஷயத்தில் ஆசிரியர்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள், ஜப்பான், மேற்கு ஜெர்மனியின் சரித்திரத்தைப் படித்து, இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு அவர்கள் எப்படி உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று கல்வி என்பது உத்தியோகத்துக்கான ஒரு பாஸ்போர்ட் ஆகிவிட்டது. இந்தப் போக்கு மாற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பதற்காகவே கல்வி என்ற மனப்பான்மை வளர வேண்டும்.

மேலும், கல்லூரிகளிலும் பிரதேச மொழியையே போதனா மொழியாக வைக்க வேண்டும். இது மிகவும் அவசரமானதாகும். எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக இதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. தமிழ் இன்னும் அவ்வளவு வளர்ச்சி பெறவில்லையென்றும், விஞ்ஞான பாடங்களைப் போதிப்பதற்கு தமிழில் புஸ்தகங்கள் இல்லையென்றும் சொல்லிக்கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை.

ஆங்கிலம் சர்வதேச மொழி. ஆகையால், ஆரம்பப் பள்ளி பருவத்திலிருந்தே அதை போதிக்க ஆரம்பித்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் ஆங்கிலத்தின் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கும் தனிப் பள்ளிகளுக்கே அவசியமிராது. தகுதியுள்ள ஏழை பிள்ளைகளுக்கு கல்லூரி கல்வியும் இலவசமாகக் கிடைக்க வேண்டுமென்பதே என்னுடைய ஆசை என்று ஸ்ரீ காமராஜ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.