எதிர்காலக் கனவுதனை காணாதார் இல்லை
இனிதான வாழ்வடைய விரும்பாரும் இல்லை !
மதிகொண்டத் திறத்தாலும் உழைப்பாலும் வாழ்வில்
மகத்தான உயர்வடைதல் தவறொன்றும் இல்லை !
விதியதனின் பலனாக இடர்கள்பலக் கண்டும்
வெற்றிதனை முடிவினிலே காண்பதுவே திறமை !
சதிராடும் வகைதன்னில் வாழ்ந்தவர்கள் வாழ்வும்
சரிந்தக்கதை உண்டு திறனற்ற தாலே !
இருப்பதனைக் காப்பதும் எளிதான ஒன்றே
என்றெண்ண வேண்டாம் , வாழ்கின்றப் போதில்
பொறுப்புடன் உழைத்துநாம் பொருளீட்ட வேண்டும்,
போதுமென் றயர்ந்திட போய்விடும் ஓர்நாள் !
மறுக்கவுந் தகுமோ, மறப்பதும் முறையோ ?
மாண்புடையக் குடிமகன் எனப்போற்றத் தகுமோ ?
பெருமைமிகு மைந்தனெனக் காண்பவர் போற்றும்
பெற்றோரின் கனவுதனை நனவாக்க வேண்டும் !
கனவினைக் கண்டிடச் சொன்னதும் அப்துல்
கலாமெனும் அறிஞனவன் ;
காலத்தினால் நல்ல அழியாப் புகழ்தன்னைக்
கண்டிட்ட மன்னவன் !
நனவென் றாக்கிட அதற்கென உழைப்பதும்
நம்மின் கடமையன்றோ ?
நாளையும் கோளையும் எதிர்பார்த் திருந்திட
நமைவெற்றி வந்தடையுமோ ?
தனதுநல் உழைப்பே உயர்வினைத் தருவது
தான்வுண்மை இதுதன்னை ,
தவறா துணர்வதே நாம்கொண்ட வாழ்வின்
தலையாயக் கடமையன்றோ ?
உனதுநல் எதிர்காலம் உன்றன்நற் கரங்களில் ,
உரைத்தவன் நரேந்திரன் ;
உன்னதங் காண்கின்றத் திறந்தனைக் கொண்டிட
உயர்வினைக் காண்பாயே !
கனவுகளே இல்லாது வாழ்ந்தவர்கள் இல்லை
காதல்முதல் வளமைவரை என்பதுதான் உண்மை !
நனவுகளென் றாக்குவதே வாழ்க்கையதன் வெற்றி
நயமுடனே வாழத்தான் சுற்றமதும் போற்றும் !
வினயமுற்றக் கனவுகளை காண்பதுதான் நன்றாம்
விகாரக் கனவுகளை தவிர்ப்பதுதான் முறையாம் !
தனகெனவோர் கனவதுவும் இருக்கத்தான் வேண்டும்
தரங்கொண்டக் கனவாக சிறப்பேதான் என்றும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.